இந்திய அணியின் முன்னணி சகலதுறைவீரர்களில் ஒருவரான அக்ஷார் பட்டேல் உடல்நலக் குறைவு காரணமாக, தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மருத்துவ அவதானிப்பில் காணப்படும் அக்ஷார் பட்டேல் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியிலும் இதே காரணத்திற்காக ஆடாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வெளியிட்டுள்ள அறிக்கையில் உடல்நலக் குறைவினால் விலகிய அக்ஷார் பட்டேலுக்குப் பதிலாக மற்றுமொரு சகலதுறை வீரரான ஷஹ்பாஸ் அஹ்மட்டிற்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றது.
அதேவேளை சொந்தக் காரணங்களைக் கருத்திற் கொண்டு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரிட் பும்ராவும், மூன்றாவது T20I போட்டியில் ஆடாமல் போயிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. பும்ராவும் தென்னாபிரிக்க அணியுடனான T20I தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆடுவது சந்தேகத்திற்கிடமாகியிருக்கின்றது.
இதேவேளை ஐந்து போட்டிகள் கொண்ட இந்த T20 தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதோடு தொடரின் நான்காவது போட்டி புதன்கிழமை (17) லக்னோவில் நடைபெறுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<





















