அரையிறுதிக்குள் முதலில் நுழைந்த புனித ஜோசப், ஸாஹிரா அணிகள்

296

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம் நடாத்தும் 2017ஆம் ஆண்டுக்கான பிரிவு ஒன்றுக்கான கால்பந்து தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான அரையிறுதிக்கு தெரிவாகிய முதல் இரண்டு அணிகளாக புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணிகள் தம்மைப் பதிவு செய்தன.

ஏற்கனவே இடம்பெற்று முடிந்த குழு மட்டப் போட்டிகளின் நிறைவில் குழு A இல் முதல் இடம் பெற்ற கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணியும், குழு B இல் நான்காம் இடம் பெற்ற களுத்தறை திருச்சிலுவைக் கல்லூரி அணியும் முதலாவது காலிறுதியில் மோதின.  

பாடசாலை கால்பந்தின் காலிறுதி மோதல்களில் உள்ள அணிகள்

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம் நடத்தும் 2017 ஆம் ஆண்டுக்கான பிரிவு …

அதேபோன்று குழு B இல் இரண்டாம் இடம்பெற்ற கொழும்பு ஸாஹிரா கல்லூரி வீரர்கள் குழு A இல் மூன்றாம் இடம்பெற்ற கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியினரை எதிர்கொண்டனர். இந்த இரண்டு ஆட்டங்களும் மொறகஸ்முல்ல ஜனக ரனவக்க மைதானத்தில் இடம்பெற்றன.  

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் திருச்சிலுவைக் கல்லூரி, களுது்தறை

முதல் காலிறுதி ஆரம்பிக்கப்பட்டு 15 நிமிடங்களுக்கு இரு அணி வீரர்களும் சம அளவிலான ஆதிக்கத்தை செலுத்தினர். எனினும் புனித ஜோசப் வீரர்கள் மேற்கொண்ட ஓரிரு கோல் முயற்சிகள் திருச்சிலுவை கல்லூரி அணியின் கோல் காப்பாளர் நுவன் சந்தீப மூலம் தடுக்கப்பட்டன.

இந்நிலையில் ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லைக்கு சற்று தொலைவில் வலது புறத்தில் வைத்து புனித ஜோசப் வீரர்களுக்கு ப்ரீ கிக் ஒன்றுக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பெற்ற முன்கள வீரர் ரஷ்மித கோல்  நோக்கி நேராக உதைந்த பந்து வேகமாக கம்பங்களுக்குள் செல்ல, கொழும்பு தரப்பினர் ஆட்டத்தில் முன்னிலை பெற்றனர்.

மீண்டும் 25ஆவது நிமிடத்தில் திருச்சிலுவை வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை அவ்வணி வீரர் அர்கம் கோல் நோக்கி ஹெடர் செய்தார். எனினும் பந்து கம்பங்களை விட தொலைவால் வெளியே சென்றது.

அடுத்த நிமிடம் ஜோசப் வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்து அசேல மதுஷானின் ஹெடரின் போது வெளியே சென்றது.

பின்னர் ஜோசப் கல்லூரி அணித் தலைவர் பெர்னாண்டோ மத்திய களத்தில் இருந்து வேகமாக கோல் நோக்கி அடித்த பந்து இடது பக்க கோல் கம்பத்தை அண்மித்த வகையில் வெளியேறியது.

முதல் பாதி: புனித ஜோசப் கல்லூரி 1 – 0 திருச்சிலுவைக் கல்லூரி

இரண்டாம் பாதி ஆரம்பமாகி சில நிமிடங்களில் ஜோசப் வீரர் குரே பந்தைப் பெற்று முன்னோக்கிச் சென்று அணித் தலைவர் பெர்னாண்டோவுக்கு வழங்க, அவர் பந்தை கோல் நோக்கி உதைந்தார். எனினும் சிறப்பாக செயற்பட்ட கோல் காப்பாளர் நுவன் சந்தீப சிறந்த முறையில் அதனைத் தடுத்தார்.

அடுத்த சில நிமிடங்களில் பல வாய்ப்புக்களைப் பெற்ற அசேல மதுஷான் அவற்றை நிறைவு செய்வதில் தொடர்ச்சியாக தவறுகளை விட்டார்.

இலங்கையை வந்தடைந்த பிபா வெற்றியாளர் கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான வெற்றிக் கிண்ணத்தினை உலகம் முழுவதும் கொண்டு செல்லும்…

ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் அசேல மதுஷான் சிறந்த முறையில் பல வீரர்களைக் கடந்து பந்தை எடுத்துச்சென்று இறுதியாக கோல் நோக்கி உதைய, பந்தை கோல் காப்பாளர் தடுத்தார். இதன்போது தன்னிடம் வந்த பந்தை புனித ஜோசப் வீரர் பிங்கோ கோல் நோக்கி உதைந்து அணியை 2 கோல்களால் முன்னிலைப்படுத்தினார்.

மீண்டும் 62 நிமிடங்கள் கடந்த நிலையில் பெனால்டி பெட்டியினுள் வைத்து அசேல மதுஷான் கோல் நோக்கி உதைந்த பந்து எதிரணியின் பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டது.

70 நிமிடங்கள் கடந்த நிலையில் பெனால்டி எல்லையில் வைத்து திருச்சிலுவை வீரர்கள் மேற்கொண்ட முறையற்ற விளையாட்டு காரணமாக ஜோசப் வீரர்களுக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை குரே கோலாக்கினார்.

மீண்டும் 75 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் இருந்து பந்தைப் பெற்ற அணித் தலைவர் பெர்னாண்டோ, பெனால்டி பெட்டியின் ஒரு திசையில் இருந்து பந்தை கோல் திசைக்குள் எடுத்துச் சென்று கம்பங்களுக்குள் பந்தை செலுத்தி அணிக்கான நான்காவது கோலையும் பெற்றுக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து முதல் கோல் பெறுவதற்கான ப்ரீ கிக் கிடைத்த இடத்தை ஒத்த இடத்தில் இருந்து மீண்டும் புனித ஜோசப் வீரர்களுக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. அதனைப் பெற்ற ரஷ்மித சிறந்த முறையில் கோல் நோக்கி உதைந்தார். எனினும் நுவன் சந்தீப அதனை வெளியே தட்டிவிட்டார்.

ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய நடப்புச் சம்பியன் புனித ஜோசப் கல்லூரி 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியைப் பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகிய முதல் அணியாக தம்மைப் பதிவு செய்தது.

முழு நேரம்: புனித ஜோசப் கல்லூரி 4 – 0 திருச்சிலுவைக் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

புனித ஜோசப் கல்லூரி – P.C. ரஷ்மித 18’, S.S பிங்கோ 57’, P.L.N.S குரே 71’, J.N பெர்னாண்டோ 76’

மஞ்சள் அட்டைகள்

புனித ஜோசப் கல்லூரி – S.S பிங்கோ 58’


ஸாஹிரா கல்லூரி, கொழும்பு எதிர் கிங்ஸ்வுட் கல்லூரி, கண்டி

இந்த ஆட்டம் ஆரம்பித்து முதல் 10 நிமிடங்களுக்குள் ஸாஹிரா கல்லூரி அணி எதிரணியின் பகுதியில் வைத்து இரண்டு ப்ரீ கிக் வாய்ப்புகளைப் பெற்றது. இதன்போது உதையப்பட்ட பந்துகளை கிங்ஸ்வுட் கோல் காப்பாளர் சிறந்த முறையில் பிடித்தார்.

18ஆவது நிமிடத்தில் ஸாஹிரா கல்லூரி வீரர் நஸ்ருடீன் பந்தை எதிரணியின் கோல் எல்லைவரை எடுத்துச் சென்று கோலுக்கான இறுதி முயற்சியை மேற்கொண்டபோதும் பந்து கம்பங்களுக்கு வெளியே சென்றது.

22ஆவது நிமிடத்தில் கிங்ஸ்வுட் தரப்பின் கோல் எல்லையில் பந்தைப் பெற்ற நஸ்ருடீன் அதனை ஹம்மாதிற்கு பரிமாற்றம் செய்தார். அவர் கோல் நோக்கி அடித்த இலகுவான பந்தை கிங்ஸ்வுட் கோல் காப்பாளர் நழுவவிட பந்து கம்பங்களுக்குள் சரணடைந்தது. எனவே, ஸாஹிரா வீரர்கள் தமது முதல் கோலைப் பதிவு செய்தனர்.

சம்பியன் லீக்கிற்கான வெற்றிப் பாதையில் ரெட் ஸ்டார் அணி

தற்பொழுது நடைபெற்று வரும் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) கால்பந்து தொடரின் சுபர் சிக்ஸ் போட்டிகளில்…

அதற்கு பதில் கொடுக்கும் வகையில் அடுத்த நிமிடம் கிங்ஸ்வுட் வீரர்களும் தமக்கான முதல் கோலைப் பெற்றனர். எனினும் நடுவரால் அது ஓப் சைட் கோல் என தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் 28ஆவது நிமிடத்தில் ஸாஹிரா வீரர்களிடையே இடம்பெற்ற பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் தன்னிடம் வந்த பந்தைப் பெற்ற மொஹமட் ராஷா, அவ்வணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

அதன் பின்னர் முதல் பாதி நிறைவடையும்வரை ஸாஹிரா கல்லூரி வீரர்களே பந்தை அதிகம் தம்மிடையே வைத்து விளையாடினர்.

முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 2 – 0 கிங்ஸ்வுட் கல்லூரி

46 நிமிடங்கள் கடந்த நிலையில் ஸாஹிரா வீரர் ஆகிப்பிடம் இருந்து பெற்ற பந்தை அணித் தலைவர் முர்ஷித் கோல் நோக்கி எடுத்துச் சென்றார். எதிரே கோல் காப்பாளரும் முன்னோக்கி வருகையில் முர்ஷித் கோல் நோக்கி உதைந்த பந்து கம்பங்களை விட உயர்ந்து வெளியே சென்றது.

ஆட்டத்தின் 51ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து அனுப்பப்பட்ட பந்தை முன் களத்தின் இடது புறத்தில் இருந்து பெற்ற ஹிமாஷ் சற்று முன்னே சென்று முர்ஷிடுக்கு பரிமாற்றம் செய்ய, முர்ஷிட் மிக வேகமாக கோலுக்குள் பந்தை செலுத்தி தனது முதல் கோலைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் 2 நிமிடங்களில் கிங்ஸ்வுட் கோல் எல்லைக்கு சற்று வெளியில் இடது புறத்தில் வைத்து கிடைத்த ப்ரீ கிக்கை 19 வயதின் கீழ் தேசிய அணி வீரர் மொஹமட் ஆகிப் பெற்றார். அவர் உதைந்த பந்து கோல் கம்பத்தின் மேல் பகுதியில்பட்டு வெளியேறியது.

ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் ஸஹிரா வீரர் ரஷீட் பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து நீண்ட தூர உதையாக கோல் நோக்கி செலுத்திய பந்து கோல் காப்பாளருக்கும் மேலால் சென்று கம்பங்களுக்குள் புகுந்தது.

அதன் பின்னரும் ஸாஹிரா வீரர்களால் தொடர்ந்து சில கோல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி 4 – 0 கிங்ஸ்வுட் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

ஸாஹிரா கல்லூரி – N.S ஹம்மாத் 22, H.ராஷா 28, M.முர்ஷிட் 51, M.ரஷீட் 73

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

ஸாஹிரா கல்லூரி – M.F.M ஆகிப் 45’

கிங்ஸ்வுட் கல்லூரி – M.D.D அவிஷ்க 24’

சிவப்பு அட்டை பெற்றவர்கள்

கிங்ஸ்வுட் கல்லூரி – M.D.D அவிஷ்க 24’