சகீப் அல் ஹஸனின் சகலதுறை ஆட்டத்தினால் இலங்கைக்கு படுதோல்வி

622

பங்களாதேஷில் நடைபெற்று வரும் முக்கோண ஒரு நாள் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதிய மூன்றாவது போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 163 ஓட்டங்களால் இலங்கையை அபாரமாக வீழ்த்தியுள்ளது.  

[rev_slider LOLC]

டாக்கா நகரின் மிர்பூரில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மொர்தஸா முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.

முதல்தரமான கிரிக்கெட் விளையாடினால் வெற்றி பெறலாம் – மெதிவ்ஸ்

இலங்கை அணி வீரர்கள் துடுப்பாட்டத்தில் சிறப்பான ஆரம்பத்தைத் தருகின்ற போதிலும்….

அஞ்செலோ மெதிவ்ஸ் தொடை உபாதைக்கு உள்ளாகிய காரணத்தினால் இலங்கை அணியினை தினேஷ் சந்திமால் இப்போட்டியில் வழிநடாத்தியிருந்ததோடு மெதிவ்சுக்குப் பதிலாக நிரோஷன் திக்வெல்ல அணிக்குள் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோன்று, இன்னுமொரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீரவின் இடத்தினை நுவான் பிரதீப் ஈடு செய்திருந்தார்.

இத்தொடரில் புதன்கிழமை நடைபெற்ற தம்முடைய முதல் போட்டியில் ஜிம்பாப்வே (19) அணியிடம் 12 ஓட்டங்களால் தோல்வியினை தழுவிய இலங்கை அணி முதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் மைதான சொந்தக்காரர்களினை எதிர்கொள்ள தயாராகியிருந்தது.

மறுமுனையில் இத்தொடரினை இலகுவான வெற்றி ஒன்றுடன் ஆரம்பித்த பங்களாதேஷ் அணியும் நல்ல முடிவு ஒன்றினை எதிர்பார்த்து தமது துடுப்பாட்டத்தினை நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக ஆரம்பித்தது.

போட்டியின் முதல் ஓவரிலேயே இலங்கை அணிக்கு பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அனாமுல் ஹக்கின் விக்கெட்டினை கைப்பற்றும் சந்தர்ப்பம் கிட்டியது. எனினும் அந்த வாய்ப்பு தவறவிடப்பட அனமுல் ஹக் ஏனைய ஆரம்ப வீரர் தமிம் இக்பாலுடன் இணைந்து சிறப்பான துவக்கத்தினை வழங்கினார்.

முதல் விக்கெட்டுக்காக இவ்விரண்டு வீரர்களினாலும் 71 ஓட்டங்கள் பகிரப்பட்டது. பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டினை திசர பெரேரா வீழ்த்தினார். முதல் விக்கெட்டாக அனாமுல் ஹக் 35  ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு நடந்தார். எனினும் தமிம் இக்பால் தன்னுடைய 40ஆவது ஒரு நாள் அரைச்சதத்துடன் புதிய துடுப்பாட்ட வீரர் சகீப் அல் ஹஸனுடன் இணைந்து தனது தரப்புக்கு வலுச்சேர்த்தார்.

2017 இல் இருந்து இலங்கை அணி மீண்டு வர மஹேல ஜயவர்தன ஆதரவு

இலங்கை தேசிய அணியின் தலைமை மற்றும் முகாமைத்துவ நிலைகளை அவர்கள்……….

இரண்டாம் விக்கெட்டுக்காக நல்லதொரு இணைப்பாட்டம் (99) பகிரப்பட்டிருந்தது. பங்களாதேஷ் அணியின் இரண்டாம் விக்கெட்டாக தமிம் இக்பால் ஆட்டமிழந்திருந்தார். தனது தரப்பை உறுதியான நிலையொன்றுக்கு கொண்டு சென்ற இக்பால் 7 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 84 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிம் இக்பாலின் விக்கெட்டின் போதே 150 ஓட்டங்களினை தாண்டியிருந்த பங்களாதேஷ் அணிக்கு சகீப் அல் ஹஸன் மற்றும் முஸ்பிகுர் ரஹீம் ஆகியோர்  அதிரடி அரைச்சதங்களை குவித்து மேலும் பெறுமதி சேர்த்தனர்.

இவர்களின் அதிரடியோடு 50 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து  320 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் சகீப் அல் ஹஸன் 7 பெளண்டரிகள் அடங்கலாக 63 பந்துகளுக்கு 67  ஓட்டங்களினையும், முஸ்பிகுர் ரஹீம் 52 பந்துகளுக்கு 4 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 62 ஓட்டங்களினையும் குவித்திருந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்களான திசர பெரேரா 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் நுவான் பிரதீப் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 321 ஓட்டங்களினை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த குசல் ஜனித் பெரேரா மற்றும் உபுல் தரங்க ஆகியோர் எதிர்பார்த்த துவக்கத்தினை தரவில்லை.

இங்கிலாந்து இளையோர் அணியில் விளையாடி வரும் இலங்கை வீரர் சவீன்

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதுடைய சவீன் பெரேரா, நியூசிலாந்தில்….

இவர்களைத் தொடர்ந்து மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் வெறும் 19 ஓட்டங்களினையே குவித்து ஏமாற்றினார். மெண்டிஸ் இப்போட்டியோடு சேர்த்து அவரது கடந்த ஆறு ஒரு நாள் இன்னிங்சுகளிலும் வெறும் 33 ஓட்டங்களினையே பெற்றிருக்கின்றார்.

இதனையடுத்து வந்த அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் 20 ஓட்டங்களை எடுப்பதற்கும் சிரமத்தை எதிர்கொண்டனர். இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் சாதர்யமான முறையில் செயற்பட்டிருந்த போதிலும் அவரை பங்களாதேஷ் வீரர்கள் இலங்கை அணியின் 5ஆம் விக்கெட்டாக ரன் அவுட் முறையில் ஓய்வறை அனுப்பியது. சந்திமால் 28 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

இப்படியாக அனைத்து முக்கிய துடுப்பாட்ட வீரர்களும் சொதப்பலாக செயற்பட்ட பின்னர் சிறிது நேரம் திசர பெரேரா வானவேடிக்கை காட்டத் தொடங்கினார். பெரேராவின் விக்கெட்டும் வீழ்த்தப்பட போட்டியில் வெற்றி பெறுவது பங்களாதேஷுக்கு மிகவும் இலகுவாக மாறியது. முடிவில் 32.2  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை அணியினர் 157 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

இலங்கையின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக திசர பெரேரா 14 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 29 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ஏற்கனவே துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சகிப் அல் ஹஸன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி இப்போட்டியில் தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்ததோடு, அணித் தலைவர் மஷ்ரபி மொர்தஸா, ருபெல் ஹஸன் ஆகியோரும் தங்களது பங்குக்கு தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி இலங்கை அணியினை கட்டுப்படுத்தியிருந்தனர்.

இப்போட்டியில் பங்களாதேஷ் அடைந்த வெற்றி ஒரு நாள் போட்டிகளில்  ஓட்ட வித்தியாசத்தில் அவர்களுக்கு (163) கிடைத்த பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை பங்களாதேஷ் அணியின் சகீப் அல் ஹஸன் தட்டிச்சென்றார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்த முக்கோணத் தொடரில் அடுத்ததாக ஜிம்பாப்வே அணியினை ஞாயிற்றுக்கிழமை (21) இதே மைதானத்தில் எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

முடிவு – பங்களாதேஷ் 163 ஓட்டங்களால் வெற்றி