தனது பதவியில் நீடிக்கப்போவிதில்லை என்கிறார் இன்சமாம் உல் ஹக்

847
©AFP

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய தேர்வுக்குழு தலைவருமான இன்சமாம் உல் ஹக், தேர்வுக்குழு தலைவர் பதவியில் நீடிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

இன்சமாம் உல் ஹக்கின் தேர்வுக்குழு தலைவர் பதவி ஒப்பந்தக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவுபெற இருக்கும் நிலையில், நேற்று அவர் லாஹுர் கடாபி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின்போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

ஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட ………..

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற இன்சமாம் உல் ஹக், மூன்று வருடகாலமாக குறித்த பதவியினை தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் தனது முடிவு குறித்து அறிவித்த இவர், 

“மூன்று வருடகாலமாக தேர்வுக்குழு தலைவராக செயற்பட்ட நிலையில், என்னுடைய ஒப்பந்தத்தை நீடிக்க முடிவுசெய்யவில்லை. ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கிறது. அதனைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு T20I உலகக் கிண்ணம் மற்றும் 2023ம் ஆண்டு உலகக் கிண்ணம் போன்ற தொடர்கள் நடைபெறவுள்ளன. அதனால், புதிய ஒருவரை இந்த பணிக்கு அமர்த்துவதற்கு இதுதான் சரியான தருணம். ஆகவே எனது பணியை இத்துடன் நிறைவுசெய்ய விரும்புகிறேன்”  என்றார்.

அதேவேளை, தனது இந்த முடிவு குறித்து ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஏசான் மணி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் வசீம் கான் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் இன்சமாம் உல் ஹக் குறிப்பிட்டுள்ளார்.

“எனது இந்த முடிவு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோருக்கு அறியத்தந்துள்ளேன். அத்துடன், நான் தேர்வுக்குழு தலைவராக செயற்பட்ட காலத்தில் எனக்கு அவர்கள் தந்த ஆதரவுக்கு நன்றிகளையும் தெரிவித்தேன்.

அதேநேரம் மிஷ்பா உல் ஹக் மற்றும் யூனுஸ் கான் ஆகியோரின் ஓய்வுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. குறித்த காலப்பகுதியில் அழைக்கப்பட்ட வீரர்கள் தற்போது சிறந்த அனுபவத்தை பெற்றுள்ளதுடன், அணியானது மூன்று வகையான போட்டிகளிலும் முன்னேறி வருகின்றது” என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மஹேலவும் விண்ணப்பிப்பாரா?

இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல….

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது இன்சமாம் உல் ஹக்கினை தேர்வுக்குழு தலைவராக நியமித்த பின்னர், அவர் சிறந்த இளம் வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். குறிப்பாக, இமாம் உல் ஹக்கின் இணைப்பு மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த போதும், அவர் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அத்துடன், பக்கர் சமான், சதாப் கான், ஹசன் அலி, பஹீம் அஷ்ரப் மற்றும் சஹீன் அப்ரிடி போன்ற சிறந்த இளம் வீரர்களை இன்சமாம் உல் ஹக் அடையாளம் காட்டியுள்ளார்.

அத்துடன், இவரது பதவிக்காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 2017ம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றதுடன், T20I  தரவரிசையை பொருத்தவரை, இதுவரையிலும் முதலிடத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<