இளையோர் ஒலிம்பிக் மெய்வல்லுனரில் செனிரு, டிலான் அடுத்த சுற்றுக்குத் தகுதி

138
Image Courtesy - NOCSL

இளையோர் ஒலிம்பிக் போட்டிகளின் மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (11) ஆரம்பமாகியதுடன், இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான உயரம் பாய்தல் முதல் நிலைப் போட்டியில் பங்குகொண்ட செனிரு அமரசிங்க மற்றும் ஆண்களுக்கான 400 ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட டிலான் போகொட ஆகிய இருவரும் இரண்டாவது நிலைக்கு தகுதி பெற்றனர்.

இம்முறை இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் 13 இலங்கை வீரர்கள்

ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் எதிர்வரும் 6ஆம்..

மூன்றாவது கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகியது. அர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகள், 18ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.  

இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 4,000 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இலங்கை சார்பில் 13 வீரர்கள் 7 வகையான விளையாட்டுக்களில் பங்கேற்றுள்ளனர்.  

இதுஇவ்வாறிருக்க, இம்முறை இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் பிரதான பதக்க எதிர்ப்பாக அமைந்துள்ள மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று ஆரம்பமாகின. சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் புதிய விதிமுறைகளின்படி இம்முறை இளையோர் போட்டிகளில் தகுதி மற்றும் இறுதி சுற்றுக்கள் இல்லை. ஆனால், முதலாம் (first stage) மற்றும் இரண்டாம் நிலைகளில் (second stage) அனைத்து வீரர்களும் 2 தடவைகள் போட்டியிட வேண்டும். அவ்விரண்டு நிலைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்கின்ற மூன்று வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.

இதன்படி, கடுமையான குளிர் காலநிலைக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட, கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த செனிரு அமரசிங்க, 2.05 மீற்றர் உயரம் தாவி 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்கள்

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில்..

முன்னர், இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதியினைப் பெற்றுக்கொள்வதற்காக தாய்லாந்தின் பெங்கோக் நகரில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றி 2.14 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்ற செனிரு, தனது அதிசிறந்த தனிப்பட்ட உயரத்தைப் பதிவுசெய்தார்.  

இதன்படி, உலக இளையோர் தரவரிசையில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள செனிருவுக்கு, நேற்று நடைபெற்ற முதல் நிலை போட்டியில் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.

எனினும், இறுதியாக கடந்த மாதம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றியிருந்த செனிரு அமரசிங்க, 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.10 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த போட்டியில் சீனாவின் சென் லோங் 2.13 மீற்றர் உயரம் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, பின்லாந்தின் மெட்டிலா அர்ட்டு (2.09 மீற்றர்) மற்றும் உக்ரைனின் டொரொஸ்ச்சுக் ஒலிஹ் (2.09 மீற்றர்) ஆகிய வீரர்கள் முறையே 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாம் நிலைப் போட்டிகளில் (second stage) மீண்டும் இந்த வீரர்கள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய பரா விளையாட்டில் போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில்..

டிலானின் அதிசிறந்த காலம்

பாடசாலை மட்டத்தில் மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பெற்றுவருகின்ற குருநாகல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல கல்லூரியைச் சேர்ந்த டிலான் போகொட, நேற்று நடைபெற்ற ஆண்களுக்காள 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியை நிறைவுசெய்ய 48.52 செக்கன்களை எடுத்துக் கொண்ட போகொட, தனது அதிசிறந்த காலத்தையும் பதிவுசெய்தார்.

கடந்த மாதம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற டிலான் போகொட, இம்முறை ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் சிறந்த மத்திய தூர ஓட்ட வீரருக்கான விருதையும் பெற்றுக்கொண்டார்.

எனினும், கடந்த ஜுலை மாதம் தாய்லாந்தின் பெங்கோக் நகரில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் விழாவுக்கான ஆசிய தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றியிருந்த அவர், 48.58 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், டிலான் போகொடவுடன் முதல் நிலை போட்டியில் (first stage) பங்குபற்றிய ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ரமே நிக்கொலஸ் (47.60 செக்.) முதலிடத்தையும், துருக்கியைச் சேர்ந்த கெனக்கி இல்யாஸ் (47.96 செக்.) இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதுஇவ்வாறிருக்க, நான்கு சுற்றுக்களாக நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஒட்டுமொத்த நேரக் கணிப்பீட்டின் படி டிலான் போகொட 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது நிலைப் போட்டியில் அவருக்கு 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இலங்கைக்கு ஒரு வெண்கலப் பதக்கத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான அரிய சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<