தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை ஓய்வு

Retirement News

32
Veda Krishnamurthy

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

2017 மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் 2020 மகளிர் T20 உலகக் கிண்ணம் ஆகிய இறுதிப்போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இவர் கடைசியாக இந்திய அணியில் 2020 T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அந்த சூழலில் தான் அவர் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பிறந்த 32 வயதான கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி தனது சமூக ஊடகங்களில் ஒரு உணர்ச்சிபூர்வமான குறிப்பைப் பகிர்ந்து ஓய்வை அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“பெரிய கனவுகளுடன் கூடிய ஒரு சிறிய ஊர் பெண். அப்படித்தான் எல்லாம் கடூரில் தொடங்கியது. அது என்னை எங்கே கொண்டு செல்லும் என்று தெரியாமல் ஒரு துடுப்பு மட்டையை எடுத்தேன். ஆனால் எனக்கு இந்த விளையாட்டை மிகவும் விரும்புவதாக தெரிந்தது. குறுகிய தெருக்களில் இருந்து மிகப்பெரிய மைதானங்கள் வரை, அமைதியான நம்பிக்கைகளில் இருந்து பெருமையுடன் இந்திய அணியின் ஜெர்சியை அணியும் வரை, அது என்னை இவ்வளவு தூரம் கொண்டு வரும் என்று நான் கற்பனை கூட செய்திருக்கவில்லை. கிரிக்கெட் எனக்கு வெறும் தொழில் மட்டுமல்ல, அதைவிட அதிகமானதை கொடுத்தது. நான் யார் என்ற உணர்வை அது எனக்கு அளித்தது. எப்படி போராடுவது, எப்படி விழுவது, எப்படி தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதை அது எனக்கு கற்றுக் கொடுத்தது. இன்று, நிறைவான மனதுடன், நான் இந்த அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

எனது அணி வீராங்கனைகளுக்கு, இந்தப் பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் நீங்கள் மதிப்புமிக்கதாக ஆக்கினீர்கள். நாம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டோம். வெற்றிகள், தோல்விகள் மற்றும் என்றென்றும் என்னுடன் இருக்கும் சிரிப்புகள். நீங்கள் வெறும் அணி வீராங்கனைகள் மட்டுமல்ல. நீங்கள் குடும்பம். எனது நண்பர்களுக்கு, குறிப்பாக யாரும் பார்க்காத போது எனக்காக இருந்ததற்கு நன்றி.

இந்த விளையாட்டு எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. அதற்காக நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். இப்போது திருப்பிக் கொடுக்கும் நேரம். எந்தப் பாத்திரம், எந்த வழி என்றாலும், நான் விளையாட்டுக்காக இங்கே இருக்கிறேன். இந்த இரண்டாவது இன்னிங்ஸ் அதே அளவு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நான் உண்மையாகவே நம்புகிறேன். நான் எனது இதயத்தில் தீயுடனும், ஒவ்வொரு அடியிலும் பெருமையுடனும் விளையாடினேன். எப்போதும் அணிக்காக. எப்போதும் இந்தியாவுக்காக.” என அவர் தெரிவித்தார்.

ஆக்ரோஷமான மத்திய வரிசை துடுப்பாட்ட வீராங்கனையான வேதா, இந்தியாவுக்காக 48 ஒருநாள் போட்டிகளிலும், 76 T20I சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அவர் கடைசியாக 2020 T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அதற்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2018 ஏப்ரலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் கடைசியாக ஒருநாள் போட்டியில் விளையாடினார். வேதா ஒருநாள் போட்டிகளில் 829 ஓட்டங்களையும், 3 விக்கெட்டுகளையும், T20 போட்டிகளில் 875 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

இதனிடையே, இந்திய அணிக்கும், அதன் பிறகு மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் ஏலத்திலும் தேர்வு செய்யப்படாததால் வேதா வர்ணனையாளராகவும், ஒளிபரப்பாளராகவும் மாறினார். 2024 இல் இரண்டாவது பதிப்பில் குஜராத் ஜெயண்ட்ஸுக்காக அவர் தனது மகளிர் பிரீமியர் லீக் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். ஆனால் மூன்றாவது சீசனுக்கு தக்கவைக்கப்படவில்லை. அதேபோல, 2017-18 இல் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக மகளிர் பிக் பாஷ் லீக்கின் ஒரு சீசனிலும் விளையாடிய வேதா, ஒன்பது இன்னிங்ஸ்களில் 144 ஓட்டங்களை எடுத்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<