இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் நடைபெற சாத்தியம் குறைவு

162

கொவிட்-19 பிரச்சினை, உயிரியல் பாதுகாப்பு சிக்கல்கள், நாட்டில் வெளிநாட்டவர்களை உள்வாங்குவதில் இருக்கும் சிரமங்கள் என்பவற்றை கருத்திற்கொள்ளும் போது இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் அவுஸ்திரேலிய மண்ணில் நடைபெறுவது சாத்தியம் குறைவு என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை (CA) தலைவர் ஏர்ல் எட்டிங்ஸ் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் மரணம்

மொத்தம் 16 அணிகள் பங்குபெறும் ஆடவர் T20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி தொடக்கம், நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடாத்த திட்டமிடப்பட்டிருக்கின்றது.

எனினும், உலகை ஆட்கொண்ட கொவிட்-19 எனப்படும்  கொரோனா வைரஸ் காரணமாக இந்த T20 உலகக் கிண்ணம் திட்டமிடபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையிலேயே அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தலைவரின் புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. 

“இது (T20 உலகக் கிண்ணம்) உத்தியோகபூர்வமாக கைவிடப்பட்டதோ அல்லது தள்ளிவைக்கப்பட்டதோ அறிவிக்கப்படாவிட்டாலும், 16 நாடுகளது அணிகளையும் (உலகக் கிண்ணத்திற்காக) கொரோனா வைரஸ்  அச்சம் உலகில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியாவினுள் எடுப்பது சாத்தியமற்ற ஒன்று. அல்லது (நாடுகளை உள்வாங்குவது) கஷ்டமான விடயம்.” என ஏர்ல் எட்டிங்ஸ் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலிய மண்ணில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் வைரஸ் தொற்றுக்கான வாய்ப்புக்கள் இன்னும் காணப்படுகின்றன. இதனால், அந்நாட்டு அரசு அதன் எல்லைகளையும் மூடி வைத்துள்ளது. எல்லைகள் திறக்கப்பட்டாலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை முகாமைத்துவம் செய்வது கடினம் என்பதினாலேயே T20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய மண்ணில் நடாத்துவது சாத்தியம் இல்லை என ஏர்ல் எடிங்ஸ் கருதுகின்றார். 

மேலும் கருத்து வெளியிட்ட ஏர்ல் எட்டிங்ஸ், T20 உலகக் கிண்ணம் பற்றிய கலந்துரையாடல்கள் ஐ.சி.சி. உடன் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.

“நாங்கள் கதைப்பதன் காரணமாக ஐ.சி.சி.ஆனது கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றது. இது உண்மையிலேயே சிறந்த விடயமாகும்.” 

இதேநேரம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் மற்றுமொரு அதிகாரிகளில் ஒருவராகவும், T20 உலகக் கிண்ண ஏற்பாட்டாளராகவும் இருக்கும் நிக் கோக்லி, ஐ.சி.சி. T20 உலகக் கிண்ணம் தொடர்பான இறுதி முடிவினை எடுக்க இன்னும் ஒரு மாதமளவில் எடுத்துக் கொள்ளும் என சுட்டிக்காட்டியிருந்தார்.

“எங்களிடம் (தொடர் ஒன்றினை) ஏற்பாடு செய்வதற்கான சிறந்த ஏற்பாட்டுக் குழு ஒன்று இருக்கின்றது. அவர்களால் (T20 உலகக் கிண்ண) நிகழ்வு ஒன்றுக்கான சாத்தியப்பட்டை கொண்டு வர முடியும். எனவே, அவர்கள் (ஐ.சி.சி.) இன் முடிவினை எதிர்பார்த்துள்ளனர்.” என்றார்.  

இதேநேரம், T20 உலகக் கிண்ணம் நடைபெறும் காலப்பகுதியில் அதனை நடாத்jhமல் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை நடாத்துவது பற்றியும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<