அனைவராலும், எதிர்பார்க்கப்பட்டிருந்த, 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரின் இன்றைய (23) இறுதிப்போட்டியில், வெற்றி இலக்கினை எட்டும் வகையில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கனிஷ்ட அணியின் போராட்டம், ராகுல் சாகர், அபிஷேக் சர்மா ஆகியோரின் சுழலின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டதனால், இப்போட்டியில் 34 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தி இந்திய கனிஷ்ட அணி, இந்த வருடத்திற்குரிய 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் ஆசிய கிண்ணத்தொடரின் சம்பியனாக முடிசூடிக்கொண்டது.
இதன் காரணமாக, இளையோர் ஆசிய கிண்ணத்தொடரில் முதன் முறையாக இறுதிபோட்டிக்கு தெரிவாகிய இலங்கை கனிஷ்ட இத்தொடரில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொள்கின்றது.
ஏற்கனவே இடம்பெற்ற குழு நிலைப் போட்டிகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகிய இலங்கை மற்றும் இந்திய அணிகள் முறையே பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை தோற்கடித்து, இளையோர் ஆசிய கிண்ணத்தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பவுண்டரிகளை நோக்கி பந்துகளை பதம் பார்த்த வண்ணம் ஒரு நல்ல ஆரம்பத்தினை இந்தியாவிற்கு வழங்கினர். இந்நிலையில், செபஸ்டியன் கல்லூரி சுழல் பந்து வீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரமவினால் இந்திய அணியின் முதல் விக்கெட், மொத்த ஓட்ட எண்ணிக்கை 62 ஆக இருந்த போது கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து துடுப்பாடவந்த சுப்மன் கில் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹிமான்சு ரனாவினாலும், இலங்கை கனிஷ்ட அணியின் பந்து வீச்சு நுட்பங்கள் அறியப்பட்டு அதனை சரியாக கையாண்டு ஒரு நீண்ட இணைப்பாட்டத்திற்கு வித்திடப்பட்டது, இதனால் இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்காக 88 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்திய கனிஷ்ட அணியின் சார்பாக துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட ஹிமான்சு ரனா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அரைச்சதம் கடந்து, முறையே 71 மற்றும் 70 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில், இந்திய கனிஷ்ட அணியின் முக்கிய வீரர்களை ஆட்டமிழக்கச்செய்த பிரவீன் ஜயவிக்ரம 10 ஓவர்களை வீசி 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், இந்திய கனிஷ்ட அணியின் நடுத்தரவரிசை வீரர்களை பதம்பார்த்த நிப்புன் ரன்சிக்க 7 ஓவர்களை வீசி 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர், நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கான 274 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு களமிறங்கிய இலங்கை கனிஷ்ட அணி தனது முதல் விக்கெட்டினை, போட்டியின் நான்காவது ஓவரில் 27 ஓட்டங்களினை பெற்றிருந்த போது, யாஸ் தாகூரின் சுழலில் பறிகொடுத்தது. இதனால், கடந்த போட்டிகளில் இலங்கை கனிஷ்ட அணிக்காக சிறப்பாக செயற்பட்ட பிரின்ஸ் ஓப் வேல்ஸ் கல்லூரியின் விஷ்வ சத்துரங்க, 13 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர், இரண்டாவது விக்கெட்டுக்காக மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரெவான் கெல்லி புதிதாக வந்த ஹஸித்த போயகொட உடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 78 ஓட்டங்களை பகிர்ந்தார். இந்நிலையில், களத்தில் 37 ஓட்டங்களுடன் நின்றிருந்த ஹஸித்த போயகொட இந்திய கனிஷ்ட அணியின் தலைவர் அபிஷேக் சர்மாவின் பந்து வீச்சில் பிரியம் கர்க் இடம் பிடிகொடுத்து மைதானத்தினை விட்டு வெளியேறினார்.


இலங்கை கனிஷ்ட அணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய ரெவான் கெல்லி, 101 பந்துகளில் 1 சிக்ஸர் 5 பவுண்டரிகள் உடன் 62 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் அரைச்சதம் கடந்து 57 பந்துகளிற்கு 4 பவுண்டரிகள் உள்ளடங்களாக 53 ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் இந்திய கனிஷ்ட அணி சார்பாக, அபிசேக் சர்மா 4 விக்கெட்டுகளையும், ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிக்கொண்டனர்.
போட்டி சுருக்கம்
இந்திய கனிஷ்ட அணி: 273/8(50) – ஹிமான்சு ரனா 71(79), சுப்மன் கில் 70(92), ப்ரீத்வி சாவ் 39(36), அபிசேக் சர்மா 29(44), பிரவீன் ஜயவிக்ரம 53/3(10), நிப்புன் ரன்சிக்க 50/3(7)
இலங்கை கனிஷ்ட அணி: 239(48.4) – ரெவான் கெல்லி 62(101), கமிந்து மெண்டிஸ் 53(57), ஹஸித்த போயகொட 37(38), அபிஷேக் சர்மா 37/4(10), ராகுல் சாகர் 22/3(10)
போட்டி முடிவு – இந்திய கனிஷ்ட அணி 34 ஓட்டங்களால் வெற்றி
இப்போட்டித்தொடர் பற்றிய சிலவிடயங்கள்
- இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன் – அபிஷேக் சர்மா (இந்தியா)
- தொடர் ஆட்ட நாயகன் – ஹிமான்சு ரனா (இந்தியா)
- தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் – ஹிமான்சு ரனா – 283 (இந்தியா)
- தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் – பிரவின் ஜயவிக்ரம 10 (இலங்கை), ராகுல் சாகர் 10(இந்தியா)






















