ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் இணையும் லசித் மாலிங்க

Indian Premier League 2022

683

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) விளையாடவுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மாத்திரம் கடந்த காலங்களில் விளையாடிவந்த லசித் மாலிங்க ஓய்வுபெற்றதை தொடர்ந்து, பயிற்றுவிப்பு பணிகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை காட்டிவருகின்றார். இறுதியாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில், இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும் செயற்பட்டிருந்தார்.

“ராவல்பிண்டி ஆடுகளம் சராசரிக்கும் குறைவானது” ; ஐசிசி

இவ்வாறான நிலையில், IPL தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வீரர் (170 விக்கெட்டுகள்) என்ற பெருமையை கொண்டுள்ள லசித் மாலிங்கவை, ராஜஸ்தான் றோயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தவிடயம் அவர்களுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயிற்சி குழாத்தில் இணையும் இரண்டாவது இலங்கையராக லசித் மாலிங்க இடம்பிடித்துள்ளார். ஏற்கனவே, இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பணிப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.

IPL தொடரில் இம்முறை 10 அணிகள் விளையாடுவதுடன், இரண்டு குழுக்களாக வகுக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணிகள் இடம்பிடித்துள்ள ஏ குழுவில் ராஜஸ்தான் அணி இடம்பிடித்துள்ளது. இந்த ஆண்டுக்கான IPL தொடர் இம்மாதம் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<