இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆட்ட நிர்ணயத்திற்கு முயற்சித்தவர் சிக்கினார்

402

ஷார்ஜா கிரிக்கெட் அரங்கின் கிரிக்கெட் ஏற்பாட்டாளரும் முன்னாள் ஊழியருமான இர்பான் அன்சாரி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) ஊழல் எதிர்ப்பு விதிகளை மீறி இருப்பதாக இன்று (10) உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இலங்கைக்கு எதிராக 2017 ஓக்டோபரில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்ராஸ் அஹமடை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதற்கு அன்சாரி அணுகியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) ஐ.சி.சி. இடம் முறையிட்டது.

ஒரு நாள் தொடரில் இலங்கையை வைட் வொஷ் செய்த பாகிஸ்தான்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாஹ் நகரில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும்…..

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுடன் இணைந்து செயற்படும் அன்சாரி, வலைப்பயிற்சிக்கு பந்துவீச்சாளர்களை வழங்கி உதவுகிறார். அவர் ஊழல் எதிர்ப்பு விதிகளின் மூன்று புள்ளிகளை மீறி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு விடயத்தை பெற முயற்சிப்பது, தூண்டுவது, கவர்வது அல்லது பங்கேற்பவரை தோல்வியுற ஊக்குவிப்பது அல்லது ஊழல் எதிர்ப்பு பிரிவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பது உட்பட 2.3.2, 2.3.3 மற்றும் 2.4.6 ஆகிய மூன்று விதிகளின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2017 ஒப்டோபரில் அபூ தாபியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னர் பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ப்ராஸை, ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட அணுகியபோதும் அவர் உடனடியாக அது பற்றி அணி முகாமையாளருக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட்டில் அன்சாரி வகிக்கும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் இடைநிறுத்தப்படுவதோடு, மே 14ஆம் திகதி தொடக்கம் மே 19 ஆம் திகதி வரையிலான 14 நாட்களுக்குள் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதலளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஒன்றில் பங்கு கொண்டிருந்தது. அதன் முதல் கட்டமாக இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் என்பன ஐக்கிய அரபு இராட்சியத்தில் இடம்பெற்றது. இதில் டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றிய இலங்கை வீரர்கள் ஒரு நாள் தொடரை முழுமையாக இழந்தனர்.

பின்னர் நீண்ட இடைவெளியின் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச போட்டித் தொடராக, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் இடம்பெற்றது. குறித்த தொடரையும் இலங்கை அணி முழுமையாக இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வீடியோக்களைப் பார்வையிட