வேடிக்கையான துடுப்பாட்டத்துக்கு விடைக்கொடுக்கும் டிக்வெல்ல

3478

இலங்கை கிரிக்கெட் அணியை பொருத்தவரையில் சற்று வித்தியாசமான துடுப்பாட்டப் பாணியைக் கொண்ட வீரர் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல. இவர் பந்தை அடிக்கும் விதம் வேடிக்கையானது. வேடிக்கையான துடுப்பாட்டத்தின் மூலம் இவர் ஓட்டங்களை குவிப்பதுடன், சில சமயங்களில் அதே வேடிக்கையான துடுப்பாட்டம் அவருக்கு பாதகமாகவும் அமைந்திருந்தது.

இலங்கை அணியில் இருந்து சந்திமால் நீக்கம், திக்வெல்ல இணைப்பு

இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால்…

தேசிய அணிக்குள் டிக்வெல்ல இணைந்த காலப்பகுதியில் சிறப்பாக ஓட்டங்களை குவித்துவந்தார். இதனால், அணியில் அவர் தொடர்ந்தும் நீடிப்பார் என்ற நிலை இருந்த போதும், சில மாதங்களாக அவரது துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு அவ்வளவாக உதவவில்லை. தென்னாபிரிக்க தொடரில் சிறிதாக அவரது பங்களிப்பு இருந்தாலும், எதிர்ப்பார்க்கப்பட்ட அளவிற்கு இல்லை. SLC T-20 லீக்கிலும் அதேநிலை தொடர்ந்தது.

இதன் காரணமாக டிக்வெல்லவுக்கு முக்கிய தொடரான ஆசிய கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிட்டது. எனினும் அதிஷ்டம் அவர் பக்கம் இருக்க, தினேஷ் சந்திமால் உபாதையால் வெளியேறியதும், குறிப்பிட்ட இடம் டிக்வெல்லவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிய கிண்ணம் போன்ற மிகப்பெரிய தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துள்ள டிக்வெல்ல, இதில் எப்படியாவது சாதித்துத் தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச இணையத்தளமொன்றுக்கு கொடுத்துள்ள செவ்வியொன்றில் அவரது ஆட்டமுறையில் மாற்றங்கள் கொண்டுவரவுள்ளதாக டிக்வெல்ல தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் குறிப்பிடுகையில்,

எனது துடுப்பாட்ட யுத்திகள் மற்றும் திடங்களை மாற்றியிருந்தேன். அதில் சில மாற்றங்கள் எனது துடுப்பாட்டத்துக்கு பொருந்தியிருந்த போதும், சில மாற்றங்கள் பொருந்தவில்லை. சாதாரணமாக வேடிக்கையான முறையில் துடுப்பெடுத்தாடி நான் ஆட்டமிழந்திருக்கிறேன். அது தொடர்பில் பலரும் பேசியிருக்கின்றனர். அது உண்மைதான். ஆனால் அதே வேடிக்கையான துடுப்பாட்டத்தின் மூலம் ஓட்டங்களையும் குவித்திருக்கிறேன்.

ஆசிய கிண்ணப் போட்டிகளின் பிறகு ஓய்வு பெற மாட்டேன் என்கிறார் மாலிங்க

தனக்கு வயதானாலும் உடற்தகுதி குறித்து மிகுந்த…

அத்துடன் கடந்த காலங்களில் வேகமாக ஓட்டங்களை பெற முற்பட்ட போதே, விக்கெட்டை விட்டுக்கொடுத்தேன். இப்போது நான் பொறுமையாக துடுப்பெடுத்தாட வேண்டும் என நினைக்கிறேன். நிதானமாக துடுப்பெடுத்தாடி அதிகமான ஓட்டங்களை பெற்றுக்கொள்ளும் போதுதான், எனது துடுப்பாட்டத்தின் தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும்.

தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீர ஆகியோர், எனது துடுப்பாட்டத்தை அனைத்து வகையான போட்டிகளுக்கும் ஏற்ப எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறினர். அது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு உதவியது. ஆனால், T-20 போட்டிகளில் உளவியல் ரீதியில் நான் மேம்பட வேண்டியுள்ளது. அதேவேளை பயிற்றுவிப்பாளர்களிடம் கலந்துரையாடி முன்னர் இருந்த டிக்வெல்லவாக மீண்டும் வந்துள்ளமை எனக்கு மேலும் நம்பிக்கையளிக்கிறதுஎன்றார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ணத் தொடரின் முதல் போட்டியில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<