மீண்டும் புத்துயிர் பெறவுள்ள லங்கன் ப்ரீமியர் லீக்

835

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டின் கீழ் கடந்த வருடம் ஆரம்பிக்கப்படவிருந்த வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய லங்கன் ப்ரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரை இவ்வருடம் புத்துயிர் பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளில் இலங்கை கிரிக்கெட் சபை ஈடுபட்டு வருகின்றது.

பந்து வீசுவதற்கான எண்ணமில்லை; அஞ்செலோ மெதிவ்ஸ்

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும்…..

இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் லங்கன் ப்ரீமியர் லீக் தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

நேற்று (01) நடைபெற்ற சுப்பர் ப்ரொவின்சியல் தொடருக்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே மொஹான் டி சில்வா, லங்கன் ப்ரீமியர் லீக் குறித்து கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நாம் தற்போது லங்கன் ப்ரீமியர் லீக் தொடருக்கான திட்டங்களை வகுத்து வருகின்றோம். எதிர்வரும் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் தொடரை நடத்த முடியும் என நம்புகிறோம்” என்றார்.

இலங்கை கிரிக்கெட் சபை லங்கன் ப்ரீமியர் லீக்கினை கடந்த வருடம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தது. இதன்படி, குறித்த தொடரை நடத்துவதற்காக ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களின் இடைப்பட்ட காலப்பகுதியை ஐசிசியிடம் பெற்றிருந்தது. எனினும், இலங்கை கிரிக்கெட் சபையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் காரணமாக தொடர் கைவிடப்பட்டது.

நீதிமன்றத்தில் இன்று ஆஜராகும் திமுத் கருணாரத்ன

இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப ….

கடந்த வருடம் தொடர் கைவிடப்பட்டமை குறித்து மொஹான் டி சில்வா குறிப்பிடகையில், “உலகக் கிண்ண தயார்படுத்தலை அடிப்படையாக கொண்டு, கடந்த வருடம் லங்கன் ப்ரீமியர் லீக் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் துரதிஷ்டவசமாக கிரிக்கெட் சபையில் ஏற்பட்ட மாற்றங்களால் தொடரை நடத்தமுடியவில்லை. கடந்த முறை நாம் மிகவும் போட்டித் தன்மையான தொடரொன்றை நடத்தவே திட்டமிட்டிருந்தோம். குறித்த தொடர் நடத்தப்பட்டிருக்குமானால் எமது வீரர்களுக்கு சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாடும் அனுபவத்தை வழங்கியிருக்க முடியும்”  என்றார்.

இதேவேளை, இவ்வருடம் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ள லங்கன் ப்ரீமியர் லீக் தொடர் குறித்த பல தீர்மானங்கள் இதுவரை முடிவுசெய்யப்படவில்லை. எவ்வாறாயினும், இந்த தொடரில் 5 அல்லது 6 அணிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், தொடரின் பணிப்பாளராக கடந்த வருடம் நியமிக்கப்பட்டிருந்த ரசல் ஆர்னல்ட் மீண்டும் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<