கொவிட்-19 தொற்று காரணமாக பிற்போடப்படவுள்ள LPL தொடர்

Lanka Premier League 2021

123

இலங்கையில் எதிர்வரும் ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில்  நடத்த திட்டமிடப்பட்டிருந்த லங்கா ப்ரீமியர் லீக்கின் இரண்டாவது பருவகால போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் கொவிட்-19 தொற்று காரணமாக, லங்கா ப்ரீமியர் லீக் தொடர் பிற்போடப்படவுள்ளது. இதற்கு முன்னர், லங்கா ப்ரீமியர் லீக் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22ம் திகதிவரை நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது.

எனினும், தற்போதைய நிலையில், ஐசிசி T20 உலகக் கிண்ண தொடரின் நிறைவுக்கு பின்னர், நவம்பர் – டிசம்பர் மாதங்களில் போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் ரவின் விக்ரமரத்ன, எமது இணையத்தளத்துக்கு அறிவித்துள்ளார்.

லங்கா ப்ரீமியர் லீக்கின் முதல் பருவகால போட்டிகள் கடந்த ஆண்டு நடத்தப்பட்டிருந்தது. ஐந்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், சம்பியன் கிண்ணத்தை ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிக்கொண்டதுடன், போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், உயிரியல் பாதுகாப்பு வளையத்தில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…