சைனீஸ் தாய்ப்பேயில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட இலங்கை வீரர்கள் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியிருந்தனர்.
இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட டில்ஹானி லேக்கம்கே 56.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு இராணி (56.82 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், சைனீஸ் தாய்ப்பே வீராங்கனை பின் சுன் சூ (53.03 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
சில நாட்களுக்கு முன்பு தென் கொரியாவில் நிறைவடைந்த 26ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்ற டில்ஹானி, 55.53 மீற்றர் தூரம் எறிந்து 7ஆவது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
இதனிடையே, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.38 செக்கன்களில் நிறைவு செய்து சமோத் யோதசிங்க வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
இந்தப் போட்டியாது மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்ததுடன், முதல் மூன்று இடங்களுக்கு இடையே 4 செக்கன்கள் மட்டுமே இடைவெளி இருந்தது. இப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஜோசப் அயோத் (10.34 செக்.) தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க, ஜப்பானின் ப்ரோனோ டெடே (10.36 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
- டுபாய் கிராண்ட் பிரிக்ஸில் முதலிடம் பிடித்த சமோத்; யுபுனுக்கு பின்னடைவு
- ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று காலிங்க குமாரகே சாதனை!
- பெண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்
முன்னதாக நடைபெற்ற முதலாவது தகுதிகாண் சுற்றை 10.29 செக்கன்களில் நிறைவு செய்த அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சமோத் யோதசிங்கவும் அண்மையில் நிறைவடைந்த ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தின் தகுதிகாண் சுற்றை 10.40 செக்கன்களில் முடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். எனினும், அரையிறுதியில் அவர் பதிவுசெய்த 10.46 செக்கன்கள் நேரப் பெறுமதியானது, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற போதுமானதாக இருக்கவில்லை.
இதேவேளை, ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட இலங்கையின் லெசந்து அர்த்தவிது 2.05 மீற்றர் உயரத்தைத் தாவி 6ஆவது இடத்தைப் பெற்றார். இப்போட்டியில் ஜப்பான் வீரர் நாவோடோ ஹசேகாவா 2.22 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தைப் சுவீகரித்தார்.
இது இவ்வாறிருக்க, இந்தப் போட்டித் தொடரில் இலங்கையின் நட்சத்திர ஓட்ட வீரர்களான அருண தர்ஷன, காலிங்க குமாரகே மற்றும் நிஷேந்திர பெர்னாண்டோ ஆகியோர் பங்குபற்றிவிருந்தனர். எனினும், அண்மையில் நிறைவடைந்த ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்குப் பிறகு ஏற்பட்ட காயம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக குறித்த 3 வீரர்களுக்கும் இந்த தொடரில் இருந்து விலக வேண்டியிருந்தது.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<