இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கேரி கிஸ்டன்

2
Gary Kirsten

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாபிரிக்காவின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான கேரி கிஸ்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>முரளி திசோனின் அபார துடுப்பாட்டத்தால் யாழ். மத்தி வடக்கின் சமரில் வெற்றி<<

அதன்படி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்திருந்த சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நிறைவடைந்தனைத் தொடர்ந்து, கேரி கிஸ்டன் புதிய பொறுப்பை ஏற்றிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

கேரி கிஸ்டன் 2026ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, இலங்கை அணியின் பயிற்சியாளராக செயற்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

57 வயது நிரம்பிய கேரி கிஸ்டன் 2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரினை வென்ற போது அந்த அணியின் பயிற்சியாளராக காணப்பட்டிருந்தார்.

அத்துடன் தென்னாபிரிக்காவை டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதலிடத்திற்கு கொண்டு சென்ற பெருமையும் கொண்டிருக்கும் கேரி கிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் செயற்பட்டிருக்கும் அனுபவத்துடன் காணப்படுகின்றது.

அதேவேளை இவர் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் நடைபெற்று முடிந்திருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடரில் நமீபிய அணியின் ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த 2022ஆம் ஆண்டு IPL தொடரில் கன்னி பிரவேசத்தினை மேற்கொண்டு சம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைடன்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் காணப்பட்ட கேரி கிஸ்டன் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் பணிபுரிந்து T20 லீக்குகளில் பணியாற்றிய அனுபவத்தினையும் கொண்டிருக்கின்றார்.

கேரி கிஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியினை 2027 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு தயார் செய்வதனை முதல் இலக்காக கொண்டு செயற்படுவார் என சுட்டிக்காட்டப்ட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<