போட்டி நெரிசல்: ஐந்து பதில் வீரர்களை பயன்படுத்த பிஃபா பரிந்துரை

90

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னரான அதிக நெரிசல் கொண்ட கால்பந்து போட்டி அட்டவணைக்கு ஏற்ப போட்டி ஒன்றில் பயன்படுத்த முடியுமான பதில் வீரர்களின் எண்ணிகையை ஐந்தாக அதிகரிப்பதற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) பரிந்துரைத்துள்ளது. 

வழக்கமாக போட்டி ஒன்றில் மூன்று வீரர்களையே பதில் வீரர்களாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் கொவிட்-19 தொற்றினால் கடந்த மார்ச் நடுப்பகுதி தொடக்கம் சர்வதேச அளவில் கால்பந்து லீக்குகள் மற்றும் சர்வதேச போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் போட்டித் தொடர்களை பூர்த்தி செய்வதற்கு கால்பந்து நிர்வாகங்கள் எதிர்பார்த்துள்ளன

எனினும் இவ்வாறு போட்டிகளை நடத்தி முடிப்பதற்கு குறுகிய காலத்திற்குள் அதிக போட்டிகளை நடத்த வேண்டிய நெருக்க ஏற்பட்டுள்ளது.   

இதற்கு வசதியாகவே கால்பந்து வீதிகளை நிர்ணயிக்கும் அமைப்பான IFAB அதிக பதில் வீரர்களை போட்டியில் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்து பரிந்துரைத்துள்ளது. எனினும் இது தொடர்பான இறுதி முடிவை போட்டி ஏற்பாட்டாளர்களே எடுக்க வேண்டும் என்று பிஃபா குறிப்பிட்டுள்ளது.  

வழமைக்கு மாறாக தொடர்ச்சியான போட்டிகளில் ஆடுவதால் வீரர்கள் மீதான சுமை காரணமாக உபாதை ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதும் இது தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கான காரணங்களில் ஒன்றாகும்என்று பிஃபா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.     

“போட்டியின்போது ஒவ்வொரு அணிக்கும் ஐந்து பதில் வீரர்கள் பயன்படுத்த தற்போது வாய்ப்பு அளிக்கப்படுவதோடு, மேலதிக நேரத்தின்போது எஞ்சிய ஒரு மேலதிக வீரரை வைத்திருப்பதற்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறதுஎன்றும் அதில் கூறப்பட்டுள்ளது.  

முதல்பாதி இடைவெளை உட்பட அதிக பட்சம் மூன்று பகுதிகளில் பதில் வீரர்கள் பயன்படுத்தப்பட முடியும் என்று பிஃபா மேலும் குறிப்பிட்டுள்ளது.  

இந்த விதியானது அடுத்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்த பருவம் அதேபோன்று அடுத்த பருவம் மற்றும் சர்வதேச போட்டிகளில் பயன்படுத்த முடியும்

எதிர்வரும் வாரங்களில் போட்டிகள் பாதுகாப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டால் மன்செஸ்டர் சிட்டி போன்ற கழகங்கள் மூன்று போட்டித் தொடர்களில் குறுகிய காலத்திற்குள் ஆட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகின்றன.  

சிட்டி அணி ஓகஸ்ட் வரையான பத்து வார காலத்திற்குள் மேலும் 10 ப்ரீமியர் லீக் போட்டிகள், ஆறு சம்பியன்ஸ் லீக் போட்டிகள் மற்றும் மூன்று எப்.. கிண்ண போட்டிகள் என மொத்தம் 19 போட்டிகளில் ஆட வேண்டி இருக்கும்

அதேபோன்று 12 சீரி A, ஆறு சம்பியன்ஸ் லீக் மற்றும் இரண்டு கொப்பா இத்தாலியா போட்டிகள் என்று ஜுவான்டஸ் கழகம் இன்னும் 20 போட்டிகளில் ஆட வேண்டி ஏற்படும்.  

சுகாதார நிர்வாகம் மற்றும் அரசாங்கங்கள் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே கால்பந்து போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் பிஃபா வலியுறுத்தியுள்ளது.