கோபா அமெரிக்கா கால்பந்தாட்டத் தொடர் 2016 இன்று ஆரம்பம்

269
Copa America 2016

பிரேசில், ஆர்ஜென்டினா உட்பட 16 அணிகள் பங்கேற்கும், முன்னதாக தென் அமெரிக்க போட்டிகள் எனக் கூறப்பட்ட கோபா அமெரிக்கா கால்பந்தாட்டத் தொடர் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் கோலாகலமாக ஆரம்பிக்கிறது.

கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டி, தென் அமெரிக்க நாடுகளில் பிரபலம் வாய்ந்ததாகும். 1916ஆம் ஆண்டு முதல் நடந்துவரும் இந்தப் போட்டி நூற்றாண்டு கொண்டாட்டத்தை எட்டியிருக்கிறது. இதன்படி 45ஆவது கோபா அமெரிக்கா கால்பந்துத் திருவிழா இன்று முதல் வருகிற 26ஆம் திகதி வரை அமெரிக்காவில் 10 மைதானங்களில் நடைபெறுகிறது.

தென் அமெரிக்கக் கண்டத்துக்கு வெளியே இந்தப் போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். இதில் தென் அமெரிக்காவைச் சேர்ந்த 10 அணிகளும், வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்புக்கு உட்பட்ட 6 அணிகளும் என்று மொத்தம் 16 அணிகள் களம் இறங்குகின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

“ஏ” பிரிவில் அமெரிக்கா, கொலம்பியா, கோஸ்டாரிகா, பராகுவே அணிகளும் “பி” பிரிவில் ஹைதி, பெரு, பிரேசில், ஈகுவடார் அணிகளும், “சி” பிரிவில் ஜமைக்கா, வெனிசுலா, மெக்சிகோ, உருகுவே அணிகளும், “டி” பிரிவில் பனாமா, பொலிவியா, அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் சிலி ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்குத் தகுதிபெறும்.

லயோனல் மெஸ்சி தலைமையிலான ஆர்ஜென்டினா அணிக்கே கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மெஸ்சி, கோன்சலோ குவைன், ஏஞ்சல் டி மரியா உள்ளிட்டோர் அந்த அணியின் நட்சத்திர வீரர்களாக மிளிருகிறார்கள். மெஸ்சி மீது, வரி தொடர்பாக ஸ்பெயின் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் மெஸ்சி தனது தந்தையுடன் நேற்று ஆஜரானார். இதனால் முதலாவது ஆட்டத்தில் அவர் ஆடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

அர்ஜென்டினா அணி 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திலும், கடந்த ஆண்டு கோபா அமெரிக்கா இறுதி ஆட்டத்திலும் தோல்வியைத் தழுவியது. 1993ஆம் ஆண்டுக்குப் பிறகு அர்ஜென்டினா அணி பெரிய அளவிலான போட்டிகளில் மகுடம் சூடியதில்லை. அந்த சோகத்துக்கு இந்த முறையாவது விடைகொடுத்து விட வேண்டும் என்பதில் ஆர்ஜென்டினா வீரர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

“அர்ஜென்டினா அணி கோப்பையை வென்று நீண்ட காலம் ஆகிவிட்டது. இந்த முக்கியமான போட்டியில் நாங்கள் சம்பியன் பட்டம் வெல்வதற்குரிய தகுதியான அணியாக இருப்போம்” என்று மெஸ்சி சூளுரைத்துள்ளார். ஆர்ஜென்டினாவுக்குப் பலம் வாய்ந்த மெக்சிகோ கடும் சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1997 முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோபா அமெரிக்கா கோப்பையை பிரேசில் அணி 4 முறை வென்றுள்ளது. ஆனால் அதன் பிறகு பிரேசில் அணியில் குறிப்பிடும்படியான எழுச்சி இல்லை. 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதியில் ஜெர்மனியிடம் 1-7 என்ற கோல் கணக்கில் தோல்விகண்டது. கடந்த ஆண்டு கோபா அமெரிக்கா போட்டியில் கால்இறுதியுடன் நடையைக் கட்டியது. பயிற்சியாளர் துங்கா தலைமையில் இளம் வீரர்களைக் கொண்டு களம் காணும் பிரேசில் மீண்டும் சாதிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

ஆனால் பிரேசில் அணியில் முன்னணி வீரர் நெய்மார் இந்த முறை விளையாடவில்லை. அவர் சார்ந்துள்ள பார்சிலோனா கிளப் நிர்வாகம் நெய்மாரை கோபா அமெரிக்கா அல்லது ஒலிம்பிக் ஆகிய ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுவதற்கு விடுவிக்க முடியும் என்று கூறியது. இதனால் அவர் சொந்த மண்ணில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் மட்டும் கலந்து கொள்ள இருக்கிறார். தியாகோ சில்வா, டேவிட் லூயிஸ், மார்செலோ ஆகியோருக்கு பிரேசில் அணியில் இடம் கிட்டவில்லை. தசைப்பிடிப்பு காரணமாக காகாவும் கடைசி நேரத்தில் விலகியிருக்கிறார்.

உருகுவேயும் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகத் தென்படுகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ் காயத்தால் அவதிப்படுவதால் தொடக்க கட்ட ஆட்டங்களில் அவர் ஆடமாட்டார். ஜாவியர் ஹெர்னாண்டஸ் (மெக்சிகோ), ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (கொலம்பியா), வில்லியன், கேப்ரியல் (பிரேசில்), டியாகோ காடின் (உருகுவே), அலெக்சிஸ் சாஞ்சஸ், கிளாடியோ பிராவோ, அர்துரோ விடால் (சிலி), கிறிஸ்டியன் புலிசிக், ஜெர்மைன் ஜோன்ஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோரும் இந்தத் தொடரில் ரசிகர்களின் கவனிக்கத்தக்க வீரர்களாக இருக்கிறார்கள்.

இதுவரை விளையாடியுள்ள 42 கோபா அமெரிக்கா கால்பந்தாட்டத் தொடர் போட்டிகளில் ஏழு நாடுகளின் அணிகள் இந்தக் கோப்பையை வென்றுள்ளன. அர்ஜென்டினா மற்றும் உருகுவே அணிகள் ஒவ்வொன்றும் கோபா அமெரிக்காவை 14 முறைகள் வென்றுள்ளன. பிரேசில் அணி எட்டு முறையும் பரகுவே அணியும் பேரு நாட்டணியும் தலா இருமுறை வென்றுள்ளன. இவர்களைத் தவிர கொலம்பியா மற்றும் பொலிவியா நாட்டு அணிகள் தலா ஒருமுறை வென்றுள்ளன.

இன்றைய தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவும், கொலம்பியாவும் மோதுகின்றன. அமெரிக்க உள்ளூர் நேரப்படி இந்த ஆட்டம் இரவு 9.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்திய நேரப்படி மறுநாள் காலை 7 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும். பிரேசில் அணி தனது முதல் ஆட்டத்தில் ஈகுவடாரையும் (ஜூன் 4ஆம் திகதி), அர்ஜென்டினா அணி சிலியையும் (ஜூன் 6ஆம் திகதி) சந்திக்கிறது. அனைத்து ஆட்டங்களையும் சோனி சிக்ஸ், சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. உலகில் மிகப் பரவலாகப் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் கோபா அமெரிக்காவும் ஒன்றாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்