பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான 18 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் (17) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
தனன்ஜய டி சில்வாவின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த டெஸ்ட் குழாத்தில் லஹிரு உதார, சொனால் தினுஷ, தரிந்து ரத்நாயக்க, பவன் ரத்நாயக்க, பசிந்து சூரியபண்டார மற்றும் இசித விஜேசுந்தர ஆகிய 6 டெஸ்ட் அறிமுகமற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 2019ம் ஆண்டு இறுதியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய சுழல் பந்துவீச்சாளர் அகில தனன்ஜய மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், ரமேஷ் மெண்டிஸ் டெஸ்ட் குழாத்திலிருந்து இடத்தை தவறவிட்டுள்ளார்.
அதுமாத்திரமின்றி தொடர்ச்சியாக டெஸ்ட் குழாத்தில் இடம்பிடித்துவந்த வேகப்பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோவுக்கு பதிலாக கசுன் ராஜித மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ள அஞ்செலோ மெதிவ்ஸுடன், தினேஷ் சந்திமால், பெதும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய மற்றும் அசித பெர்னாண்டோ ஆகிய முன்னணி வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குழாம்
பெதும் நிஸ்ஸங்க, ஓசத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டார, சொனால் தினுஷ, பவன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, அகில தனன்ஜய, மிலான் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ, கசுன் ராஜித, இசித விஜேசுந்தர
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<