சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த அஞ்செலோ பெரேரா

Sri Lanka Cricket

1925

இலங்கை அணி வீரர் அஞ்செலோ பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளாாக எமது இணையத்தளத்துக்கு அறியக்கிடைத்துள்ளது.

அஞ்செலோ பெரேரா (31 வயது) இலங்கை அணிக்காக 6 ஒருநாள் மற்றும் 6 T20I போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள நிலையில், திடீரென இந்த ஒய்வு தீர்மானத்தை வெளியிட்டுள்ளார். இவர் 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்ததுடன், 2019ம் ஆண்டு இறுதியாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தார்.

அஞ்செலோ பெரேரா உள்ளூர் போட்டிகள் மற்றும் சர்வதேசத்தில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் அதேநேரம், வெளிநாடொன்றுக்கு குடிபெயர வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் உள்ளூர் போட்டிகளில் அதிகமாக விளையாடியுள்ள இவர், என்.சி.சி கழகத்துக்காக பல வருடங்கள் விளையாடியுள்ளார் என்பதுடன், உள்ளூர் போட்டிகளில் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராகவும் பார்க்கப்படுகின்றார்.

மொத்தமாக 107 முதற்தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 48.08 என்ற சராசரியை கொண்டிருப்பதுடன், 150 லிஸ்ட் A போட்டிகளில் 42 என்ற ஓட்ட சராசரியையும் கொண்டுள்ளார். இவர் இறுதியாக நடைபெற்றுமுடிந்த லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி வொரியர்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<