ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று (23) ஆரம்பமாகவுள்ள 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவிற்கான இலங்கை குழாத்தில் இரண்டு தமிழ் பேசும் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இதன்படி, இலங்கை மெய்வல்லுநர் அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீரர் அருந்தவராசா புவிதரனும், இலங்கை நீச்சல் அணியில் கொழும்பைச் சேர்ந்த எம்.எச் முஹம்மட்டும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சம்பியனான புவிதரன், இலங்கை மெய்வல்லுநர் நிறுவனத்தினால் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இறுதி திறன்காண் மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 5.20 மீற்றர் உயரத்ரைதத் தாவி, புதிய தேசிய சாதனை நிலைநாட்டினார். இதன் மூலம் கடந்த வருடம் நிலைநாட்டப்பட்ட 5.18 மீற்றர் என்ற தனது முந்தைய தேசிய சாதனையை புவிதரன் புதுப்பித்தார். அது மாத்திரமல்லாமல், குறித்த காலப்பகுதியில் 3 தடவைகள் அவர் தேசிய சாதனையை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அதேபோல, கடந்த மாதம் தென்கொரியாவின் பூசானில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுநர் போட்டியொன்றிலும் அவர் இலங்கை சார்பில் பங்குபற்றியிருந்தார்.
எனவே, இவ்வாறு தொடர்ச்சியாக ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனைகளையும். வெற்றிகளையும் குவித்து வந்த புவிதரனுக்கு இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம், பொதுநலவாய விளையாட்டு விழா ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றுகின்ற முதல் தெற்காசியாவைச் சேர்ந்த வீரராகவும், இலங்கை வீரராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
அதுமாத்திரமின்றி, பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் மெய்வல்லுநர் நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றுகின்ற வடக்கைச் சேர்ந்த முதல் வீரராகவும் அவர் வரலாற்று சாதனை படைத்தார். எனவே, அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற புவிரதன் இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் பிரகாசிப்பார்; என எதிர்பார்க்கப்படுகிறது.
சாவகச்சேரி இந்து கல்லூரியின் பழைய மாணவரான புவிதரன், தற்போது இலங்கை இராணுவம் சார்பாக மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றி வருவதுடன். அந்தக் கல்லூரியின் பயிற்சியாளரான கோபாலன் கணாதீபன் அவருக்கு பயிற்சி அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- 2026 பொதுநலவாய விளையாட்டு விழா ஸ்கொட்லாந்தில்
- பொதுநலவாய விளையாட்டு விழா இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடை அறிமுகம்
இதனிடையே, இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் மருதானை சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த எம்.எச் முஹம்மட் பங்குபற்றவுள்ளார்.
18 வயதான இளம் நீச்சல் வீரரான முஹம்மட் அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச நீச்சல் போட்டிகளில் தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். இதில் கொழும்பு சுகததாச நீச்சல் தடாக வளாகத்தில் கடந்த மே மாதம்; நடைபெற்ற ஆசிய வயதுப் பிரிவு சம்பியன்ஷிப் மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தெரிவுப் போட்டிகளில், ஆண்களுக்கான 50 மீட்டர் பிரஸ்ட்ஸ்ட்ரோக் மற்றும் 200 மீட்டர் பிரஸ்ட்ஸ்ட்ரோக் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் இரண்டு தேசிய சாதனைகளை அவர் தகர்த்தார். அதுமாத்திரமின்றி, ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர்ஃபிளை போட்டியில் இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரர்களான கைல் அபேசிங்க, அகலங்க பீரிஸ் ஆகியோரை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்து அசத்தினார். இந்த வெற்றிகளின் மூலம் இலங்கையின் அதிக FINA புள்ளிகளைப் பெற்ற நீச்சல் வீரராக இடம்பிடித்தார்.
அதேபோல, தாய்லாந்தின் பேங்காக்கில் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற 12-வது ஆசிய வயதுப் பிரிவு நீர் விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டியில் பங்குகொண்ட முஹம்மட், 17-18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கானப் 100 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவு ‘ஏ’ இறுதிப் போட்டியில் (A Final) வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தார்.
எனவே, இவரது இந்த சமீபத்திய செயல்பாடுகள் இலங்கை நீச்சல் விளையாட்டின் உயர்ந்து வரும் தரத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகின்றன. அதுமாத்திரமின்றி, பல ஆண்டுகளாக அகலங்க பீரிஸ் மற்றும் கைல் அபேசிங்க போன்ற வீரர்களே சர்வதேச நீச்சல் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வந்தனர். தற்போது முஹம்மட்டின் வருகை, அந்த சாதனைகளுக்கு சவால் விடுக்கக்கூடிய ஒரு புதிய தலைமுறையின் வருகையை பறைசாற்றுகிறது.
எனவே, இலங்கையின் மிகவும் நம்பிக்கையளிக்கும் இளம் நீச்சல் வீரர்களில் ஒருவராவும், எதிர்கால சர்வதேசப் போட்டிகளில் நாட்டின் வலுவான பதக்கப் போட்டியாளர்களில் ஒருவராகவும் விளங்குகின்ற முஹம்மட் இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 02 வரை நடைபெறவுள்ள 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் சார்பில் 40 விளையாட்டு வீரர்கள் (27 ஆண்கள், 13 பெண்கள்) மற்றும் 14 அதிகாரிகள் அடங்கிய குழு பங்குபற்றவுள்ளது.
அதன்படி, இலங்கை அணி பரா மெய்வல்லுநர்: 2 வீரர்கள் (1 ஆண், 1 பெண்), பளுதூக்கல்: 5 வீரர்கள் (3 ஆண்கள், 2 பெண்கள்), மெய்வல்லுநர்: 20 வீரர்கள் (15 ஆண்கள், 5 பெண்கள்), குத்துச்சண்டை: 6 வீரர்கள் (4 ஆண்கள், 2 பெண்கள்), ஜூடோ: 2 வீரர்கள் (2 ஆண்கள்), கலைத்துவ ஜிம்னாஸ்டிக்ஸ்: 3 வீரர்கள் (1 ஆண், 2 பெண்கள்), நீச்சல்: 2 வீரர்கள் (1 ஆண், 1 பெண்) ஆகிய 7 விளையாட்டுப் பிரிவுகளில் களமிறங்கவுள்ளது.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தேசிய சாதனையாளரும், நாட்டின் முன்னணி தடகள வீரருமான ருமேஷ் தாரங்க கிளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டு விழாவிற்கான இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பரா விளையாட்டு வீரரான பாலித பண்டார, ஆரம்ப விழாவின் போது இலங்கைத் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் கௌரவத்தைப் பெற்றுள்ளார்.
அதேபோல, இலங்கை அணியின் தலைமை அதிகாரியாக (Chef de Mission) மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளிலும், ஆறு முறை பொதுநலவாய விளையாட்டு விழாக்களிலும் பங்கேற்ற முன்னாள் முன்னணி வீரர் நிலூக கருணாரத்ன செயற்படுவார். இலங்கை அணியின் பொது முகாமையாளராக முஹம்மத் ரிஃபாத் பணியாற்றவுள்ளார்.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<






















