இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கட்டுநாயக்கவில் இன்று (09) நடைபெறவிருந்த 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே போட்டியின் முதல் நாளான நேற்றைய (8) தினம் சீரற்ற காலநிலை காரணமாக ஆட்டம் மதிய போசண இடைவேளைக்குப் பிறகு தொடங்கியது. இந்த நிலையில், இன்றைய நாள் முழுவதும் மழை தொடரவே ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இலங்கை கிரிக்கெட் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.
நியூசிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் வலுவடைந்துள்ள இலங்கை தரப்பு
இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு…
இந்த நிலையில், இவ்விரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி நேற்று (08) ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றயீட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் தமது முதல் இன்னிங்சுக்காக 65.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 323 ஓட்டங்களை எடுத்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான தனுஷ்க குணதிலக்க, சதீர சமரவிக்கிரம மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆகியோர் அரைச் சதங்களைக் குவித்து வலுச்சேர்த்தனர்.
பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இது இவ்வாறிருக்க, போட்டியின் இரண்டாவது நாளான இன்று காலை முதல் கட்டுநாயக்கவை அண்டிய பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக போட்டியை உரிய நேரத்தில் ஆரம்பிக்க முடியாமல் போனது.
இதனால், மைதானத்தின் ஈரம், வெள்ள நீர் தேங்கியிருத்தல் மற்றும் மழை வருவதற்கான அதிகமான சாத்தியங்கள் இருப்பதை கருத்திற்கொண்டு இன்றைய ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதேவேளை, 3 நாட்கள் கொண்ட இந்தப் பயிற்சிப் போட்டியின் இரண்டு நாட்கள் நிறைவுக்கு வந்துள்ளதால், போட்டியின் கடைசி நாளான நாளை (10) இலங்கை அணி தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தடாமல் நியூசிலாந்து அணிக்கு துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















