இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, பிக் பேஷ் லீக் (BBL) T20 தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் T20 தொடரில் இருந்து டிம் செய்பார்ட் நீக்கம்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருந்த 37 வயதான ரவிச்சந்திரன் அஷ்வின், முதன் முறையாக அவுஸ்திரேலியாவின் உள்ளூர் T20 லீக் போட்டித் தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் 15 பருவத்திற்காக சிட்னி தண்டர் அணிக்காக ஒப்பந்தமாகியிருந்தார். எனினும் அவருக்கு ஏற்பட்ட முழங்கால் உபாதை அவரது கன்னி BBL தொடர் வாய்ப்பினை இல்லாமல் செய்துள்ளது.
இது குறித்து BBL தொடரில் அஷ்வினை ஒப்பந்தம் செய்திருந்த சிட்னி தண்டர் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஷ்வின் விலகியது தண்டர் அணிக்கு (Thunder Nation) பெரும் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளது.
அதன்படி சிட்னி தண்டர் அணியின் பொது முகாமையாளர் ட்ரெண்ட் கோப்லாண்ட் அஷ்வினின் உபாதை குறித்துப் பேசுகையில், “அஷ்வினின் காயம் குறித்த செய்தி கேட்டு சிட்னி தண்டரில் உள்ள அனைவரும் மிகவும் வருத்தமடைந்தோம். அவர் விரைந்து குணமடைய பிரார்த்திக்கின்றோம். அஷ்வினுடன் நாங்கள் பேசிய முதல் தருணத்திலிருந்தே, எங்கள் அணியின் மீதான அவரது அர்ப்பணிப்பு தெளிவாக இருந்தது. அவரது உடல்நலனைப் பொறுத்து, BBL தொடரின் பிந்தைய பகுதியில் அவரை எங்கள் அணியுடன் சேர்த்து, ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தவும், அவரிடம் ஒரு நீண்ட கால உறவை உருவாக்கவும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
அதேவேளே அஷ்வினும், BBL தொடரில் ஆட முடியாமல் போனமைக்கான தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
“BBL தொடரை தவறவிடுவதால் நான் மனமுடைந்துள்ளேன். இப்போது எனது கவனம் முழுவதும் குணமடைந்து வலுவாக திரும்புவதில்தான் உள்ளது. சிட்னி தண்டர் நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது உபாதை குணமாகும் சந்தர்ப்பத்தில் இந்த தொடரின் பிற்பகுதியில் சிட்னி அணியுடன் இருக்கவும், ரசிகர்களைச் சந்திக்கவும் நான் விரும்புகிறேன்.”
அதேவேளை சிட்னி தண்டர், BBL புதிய பருவத்திற்கான தொடரின் முதல் போட்டியை டிசம்பர் 16ஆம் திகதி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















