இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் நடப்பு தொடரை ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
10 அணிகள் இடையிலான 18-வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த மார்ச் 22ஆம் ஆரம்பமாகிய இந்த தொடரில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 12 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
மறுபுறத்தில் இந்தியா– பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்றிரவு ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் ஜம்மு–காஷ்மீர், பஞ்சாப், அரியானா, குஜராத், ராஜஸ்தான், இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன.
அதேபோல, தரம்சாலாவில் நேற்றிரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ்– டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது. அத்துடன் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, இந்தியா– பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் மேலும் மேலும் அதிகரித்து வருவதால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இன்று (09) காலை பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இது இவ்வாறிருக்க, இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது போர் பதற்றம் நிலவி வருவதால் ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் என்பன இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தியது. அந்த கூட்டத்தில் வைத்து ஒருவார காலத்திற்கு ஐபிஎல் தொடரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
- PSL T20 தொடரினை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றிய பாகிஸ்தான்
- முக்கிய வேகப்பந்துவீச்சாளரினை இழக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ்
- கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ், ஜப்னா கிங்ஸ் அணிகளின் ஒப்பந்தங்கள் நீக்கம்
பிசிசிஐ இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஐபிஎல் தொடரை உடனடியாக ஒத்திவைக்க செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒத்திவைப்பு ஒரு வார காலத்திற்கு இருக்கும். அதன்பின் சூழ்நிலை குறித்து விரிவாக ஆராய்ந்து புதிய போட்டி அட்டவணை மற்றும் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிக்கப்படும்‘ எனத் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பிசிசிஐயின் செயலாளர் தேவஜித் சைகியா விடுத்துள்ள அறிக்கையில், பெரும்பாலான அணி உரிமையாளர்களின் வேண்டுகோள்கள், அவர்களின் வீரர்களின் பாதுகாப்பு கவலைகள், உணர்வுகள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துகள் ஆகியவற்றை உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு ஐபிஎல் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. நமது ஆயுதப்படைகளின் வலிமை மற்றும் தயார்நிலையில் பிசிசிஐ முழு நம்பிக்கை வைத்திருந்தாலும், அனைத்து உரிமையாளர்களின் கூட்டு நலனைக் கருத்தில்கொண்டு செயல்படுவது விவேகமானது என்று பிசிசிஐ கருதுகிறது. இந்த முக்கியமான தருணத்தில், பிசிசிஐ தேசத்துடன் உறுதியாக நிற்கிறது. இந்திய அரசு, நமது ஆயுதப் படைகள் மற்றும் நாட்டு மக்களுக்கு எங்களது ஒற்றுமையை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். ஆபரேஷன் சிந்தூரின் கீழ் நமது ஆயுதப் படைகளின் வீரத்தையும், தைரியத்தையும், தன்னலமற்ற சேவையையும் பிசிசிஐ பாராட்டுகிறது. பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் தேவையற்ற ஆக்கிரமிப்புக்கு, இந்திய இராணுவத்தினர் உறுதியான பதிலடியைக் கொடுத்து தேசத்தைப் பாதுகாத்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
கிரிக்கெட் ஒரு பேஷனாக இருந்தாலும், தேசமும் அதன் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பும் எல்லாவற்றையும் விட பெரியது. இந்தியாவைப் பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பிசிசிஐ உறுதுணையாக இருக்கும் என்பதையும், தேசத்தின் நலனுக்கு உகந்த முடிவுகளையே எப்போதும் எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது கிடைக்கும் செய்திகளின்படி இந்திய அணி எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு இந்தியாவில் மீண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக ஆசியக் கிண்ணம் நடைபெறவுள்ள காலகட்டத்தில் இந்தியாவில் வைத்து ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியும் இந்த இரண்டு காலகட்டத்தில் மீதம் இருக்கும் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<