தேசிய சுப்பர் லீக் தொடரிலிருந்து யாழ்ப்பாணம் அணி நீக்கம்

National Super League 4 Day Tournament 2026

3
National Super League 4 Day Tournament 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுப்பர் லீக் (NSL) நான்கு நாள் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. இத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கடந்த ஆண்டு வரை 5 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், இம்முறை யாழ்ப்பாணம் அணி நீக்கப்பட்டு, அணிகளின் எண்ணிக்கை 4 ஆகக் குறைக்கப்பட்டிருப்பது ஒரு விசேட அம்சமாகும்.

கொழும்பு, கண்டி, காலி மற்றும் தம்புள்ளை ஆகிய நான்கு அணிகள் பங்குபற்றும் இத்தொடரின் ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் மூன்று வாரங்களுக்கு நடைபெறவுள்ளதுடன், ஏப்ரல் 28ஆம் திகதியுடன் இச்சுற்று நிறைவடையவுள்ளது. அதனைத் தொடர்ந்து, புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மே மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இறுதிப் போட்டியானது கொழும்பு ஆர். பிரேமதாச சரவதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

ஆரம்பத்தில் 5 அணிகளுடன் 10 ஆரம்பச் சுற்றுப் போட்டிகளைக் கொண்டதாக இருந்த இத்தொடரில், 2024ஆம் ஆண்டில் 20 போட்டிகள் விளையாடப்பட்டன. பின்னர் கடந்த ஆண்டில் மீண்டும் போட்டிகளின் எண்ணிக்கை 10 ஆகக் குறைக்கப்பட்டது. இவ்வாண்டு அணிகளின் எண்ணிக்கை 4 ஆகக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பச் சுற்றுப் போட்டிகளின் எண்ணிக்கை 6 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம், ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.

இறுதியாக கடந்த ஆண்டு காலி அணிக்கும், தம்புள்ளை அணிக்கும் இடையில் நடைபெற்ற தேசிய சுப்பர் லீக் இறுதிப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. எனினும் முதல் இன்னிங்ஸில் வெற்றியீட்டிய காலி அணி சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<