2ஆவது பாதியில் அடித்த கோல்கள் மூலம் பெல்ஜியத்திற்கு வெற்றி

202
Belgium Football

யூரோ கிண்ண கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுவருகிறது. நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் உலகத் தரவரிசையில் 2ஆவது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி அயர்லாந்து அணியை எதிர்கொண்டது.

முதல் போட்டியில் இத்தாலியிடம் 2-0 என தோல்வியடைந்ததால் இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் பெல்ஜியம் அணி களம் இறங்கியது. 2ஆவது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்திற்கு அயர்லாந்து கடும் சவால் அளித்தது.

இதனால் முதல் பாதி நேரத்தில் பெல்ஜியம் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால், 2ஆவது பாதி நேரத்தில் பெல்ஜியம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

2ஆவது பாதி நேரம் தொடங்கி 3ஆவது நிமிடத்தில், அதாவது ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தில் ரொமேலு லுகாகு முதல் கோலைப் பதிவு செய்தார். அதன்பின் 61ஆவது நிமிடத்தில் விட்செல் அருமையாகத் தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். அடுத்த 9ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் லுகாகு மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் 3-0 என முன்னிலை பெற்றது.

அதன்பின் அயர்லாந்து அணியின் பதில் கோல் அடிக்கும் முயற்சியை பெல்ஜியம் வீரர்கள் அபாரமாக முறியடித்தனர். அதேசமயம் பெல்ஜியம் அணியும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. எனவே, இறுதியில் பெல்ஜியம் 3-0 என வெற்றிபெற்றது.

பெல்ஜியம் அடுத்த போட்டியில் சுவீடனை சந்திக்கிறது. இந்தப் போட்டியில் பெல்ஜியம் வெற்றிபெற்றால்தான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்