இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, நாட்டின் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் தனது நீண்டகால அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகளுக்கு இடையிலான 92 ஆவது புனிதர்களின் மாபெரும் கிரிக்கெட் சமருக்கு (Battle of the Saints) இம்முறையும் அனுசரணை வழங்குகின்றது. இதன் மூலம் இரு கல்லூரிகளுடனும் டயலொக் கொண்டுள்ள 10 ஆண்டுகால பந்தம் மேலும் வலுவடைகிறது.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த மூன்று நாள் கிரிக்கெட் சமர், வரும் மார்ச் 19, 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெறும் அணிக்கு கௌரவமிக்க Rev. Fr. Maurice J. Le Goc கிண்ணம் வழங்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இரு பாடசாலைகளுக்கும் இடையிலான விறுவிறுப்பான 52-வது மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஏப்ரல் 25 ஆம் திகதி அதே ளுளுஊ மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போட்டி Rev. Fr. Peter A. Pillai கிண்ணத்திற்காக நடத்தப்படுகின்றது.
இந்த ஆண்டு புனித சூசையப்பர் கல்லூரி அணிக்கு ரிஷ்ம அமரசிங்க தலைமை தாங்குகிறார். புனித பேதுரு கல்லூரி அணிக்கு, கடந்த ஆண்டின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியில் ஆட்டநாயகனாகத் திகழ்ந்த ஏனோஷ் பீட்டர்சன் தலைமைத்துவத்தை வழங்குகிறார்.
இவ்விரு அணிகளுக்குமிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமரை பொறுத்தவரையில் புனித சூசையப்பர் கல்லூரி 12 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. புனித பேதுரு கல்லூரி 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது. எனினும், கடந்த 2025 ஆம் ஆண்டு முதன்முறையாக மூன்று நாள் போட்டியாக நடத்தப்பட்ட ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
- முரளி திசோனின் அபார துடுப்பாட்டத்தால் யாழ். மத்தி வடக்கின் சமரில் வெற்றி
- 119ஆவது வடக்கின் சமர்; முதல்நாளில் இரு அணிகளும் பந்துவீச்சு ஆதிக்கம்
மறுபுறத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் புனித சூசையப்பர் கல்லூரி 25 வெற்றிகளையும், புனித பேதுரு கல்லூரி 23 வெற்றிகளையும் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு புனித பேதுரு கல்லூரி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று கிண்ணத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
இதனிடையே, இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய அஞ்சலோ மத்தியூஸ், சமிந்த வாஸ், துனித் வெல்லாலகே (புனித சூசையப்பர்) மற்றும் ரோய் டயஸ், ரசல் ஆர்னோல்ட், ஜனித் லியனகே (புனித பேதுரு) போன்ற பல ஜாம்பவான்களை இந்த இரு கல்லூரிகளும் உருவாக்கியுள்ளன.
இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் அதிகாரி (Group Chief Marketing Officer) லசந்த தெவரப்பெரும கூறுகையில், “டயலொக் பிக் மேட்ச் பருவகாலமானது இலங்கையின் விளையாட்டு பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். நாட்டின் சார்பில் விளையாடவுள்ள எதிர்கால வெற்றியாளர்களை உருவாக்கும் இந்த பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழாவிற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இரு அணிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இந்த விறுவிறுப்பான போட்டிகளை இலங்கையின் முதற்தர 5G வலையமைப்பின் ஊடாக நேரலையில் கண்டு மகிழுமாறு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. ரசிகர்கள் இந்தப் போட்டிகளை ThePapare TV (அலைவரிசை 126), Dialog Play Mobile App மற்றும் ThePapare.com ஊடாக நேரடியாகப் பார்க்கலாம்.
டயலொக் ஆசிஆட்டா தேசிய கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் Esports அணிகளின் பெருமைமிகு அனுசரணையாளராகும். டயலொக் Srilanka Golf open மற்றும் தேசிய பாரா விளையாட்டுக்கள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுக்களுக்கான இலங்கை அணியின் முக்கிய அனுசரணையாளராகவும் உள்ளது. மேலும் நாளைய சம்பியன்களை ஊக்குவிக்கும் தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்து, தேசிய இளையோர் மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள் மற்றும் பாடசாலை ரக்பி ஆகியவற்றையும் டயலொக் நிறுவனம் தொடர்ந்து அனுசரணை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<






















