இலங்கையுடன் மோதும் ஜிம்பாப்வே டெஸ்ட் குழாம் அறிவிப்பு

122

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் 15 பேர் கொண்ட குழாம் நேற்று முன்தினம் (14)  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த தொடருக்கான ஜிம்பாப்வே அணியின் குழாம் நேற்று (15) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டது.  

ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இம்மாதம் 19ம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை குழாம் இன்றைய தினம் (14) அறிவிக்கப்பட்டுள்ளது…………

குறித்த டெஸ்ட் தொடக்காக ஜிம்பாப்வே அணி கடந்த 11ஆம் திகதி 25 பேர் கொண்ட உத்தேச குழாம் ஒன்றினை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அதிலிருந்து இறுதி 15 பேர் கொண்ட குழாம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள குழாத்தின் படி ஜிம்பாப்வே அணியின் தலைவராக துடுப்பாட்ட சகலதுறை வீரர் ஷேன் வில்லியம்ஸ் பெயரிடப்பட்டுள்ளர். 

முதல்தர போட்டிகள் 57 இல் விளையாடியுள்ள 26 வயதுடைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெவின் கசுஷா, வெறும் 3 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள துடுப்பாட்ட வீரர் பிரையன் முட்ஸிங்கன்யாமா மற்றும் கடந்த வருடம் ஒருநாள், டி20 சர்வதேச போட்டிகளில் அறிமுகம் பெற்ற 24 வயதுடைய சுழற்பந்துவீச்சாளர் ஐன்ஸ்லி என்ட்லோவ் ஆகியோர் டெஸ்ட் அறிமுகம் பெறும் அடிப்படையில் முதல் முறையாக டெஸ்ட் குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முக்கிய அனுபவ வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான டென்டாய் சதாரா அண்மையில் உள்ளூர் போட்டியொன்றின் போது உபாதைக்குள்ளானர். இருந்தாலும் ஜிம்பாப்வே அணியின் உத்தேச குழாமில் அவர் உள்வாங்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், டென்டாய் சதாரா குறித்த உபாதையிலிருந்து இன்னும் குணமடையாததன் காரணமாக இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சதாராவின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக வேகப் பந்துவீச்சாளர்களாக சார்ல்டன் ஷூமா மற்றும் விக்டர் நியாச்சி ஆகியோர் சர்வதேச அறிமுகம் பெறும் அடிப்படையில் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

ஜிம்பாப்வே அணி கடந்த 2018ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியுடன் இறுதியாக டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியிருந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட குறித்த தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவுக்கு வந்தது. இந்த தொடரின் போது தவறவிடப்பட்ட அனுபவ துடுப்பாட்ட வீரர் கிரேக் ஏர்வின் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். 

மேலும், ப்ரெண்டன் டைலர், சிகண்டர் ராஸா, கெயில் ஜர்விஸ் மற்றும் ரெகிஸ் சகப்வா ஆகிய ஜிம்பாப்வே அணியின் அனுபவ வீரர்கள் இலங்கையுடனான டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற வேகப் பந்துவீச்சாளர் கர்ல் மும்பா தொடர்ச்சியாக உபாதைகளுக்கு முகங்கொடுத்துவந்த நிலையில் தற்போது மீண்டும் டெஸ்ட் குழாமில் இணைந்துள்ளார்.

பேசுபொருளாக மாறியிருக்கும் குசல் பெரேராவின் நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்தாக ஜிம்பாப்வேயிற்குச் சென்று அந்நாட்டு அணியுடன் இரண்டு போட்டிகள்……….

கடந்த 1994ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணி முதல் முறையாக இலங்கை அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில், இதுவரையில் ஜிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் ஒரு டெஸ்ட் வெற்றியேனும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) ஹராரேயில் ஆரம்பமாகவுள்ளது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இம்மாதம் 27ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. குறித்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று (15) தாயகத்திலிருந்து ஜிம்பாப்வே நோக்கி புறப்பட்டது. 

15 பேர் அடங்கிய ஜிம்பாப்வே டெஸ்ட் குழாம்.

ஷேன் வில்லியம்ஸ் (அணித்தலைவர்), சிகண்டர் ராஸா, ரெகிஸ் சகப்வா, கிரேக் ஏர்வின், கெயில் ஜர்விஸ், கெவின் கசுஷா, டிமைகன் மருமா, பிரின்ஸ் மசௌரி, பிரையன் முட்ஸிங்கன்யாமா, கர்ல் மும்பா, ஐன்ஸ்லி என்ட்லோவ், விக்டர் நியாச்சி, ப்ரெண்டன் டைலர், டெனால்ட் திரிபனோ, சார்ல்டன் ஷூமா  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<