யுவ்ராஜ் சிங்கை பயப்பட வைத்த முத்தையா முரளிதரன்

4072
AFP

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தான் சந்தித்த மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளர்களாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் ஆகியோர் உள்ளனர் என இந்தியாவின் முன்னாள் சகலதுறை வீரரான யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் யுவ்ராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ………

கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணம் மற்றும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கிண்ணம் ஆகியவற்றை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவரும், இந்தியாவின் அதிரடி சகலதுறை வீரருமான யுவ்ராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டிற்கு தனது ஓய்வு முடிவை கடந்த 10ஆம் திகதி மும்பையில் வைத்து அறிவித்தார்.

இந்த நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தான் சந்தித்த மிகவும் அபாயகரமான பந்து வீச்சாளர்கள் குறித்து யுவ்ராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் குறிப்பிடுகையில்,

உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளுடனும் நான் விளையாடியுள்ளேன். பல்வேறு அணி வீரர்களின் பந்து வீச்சினை ஏதிர் கொண்டுள்ளேன். ஆனால், இலங்கை அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரனின் பந்தினை ஏதிர்கொள்வது என்பது எப்போதுமே மிகவும் கடினமாக இருந்தது. அவரைப் போலவே அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத்தின் பந்து வீச்சையும் எதிர்கொள்ளவே முடியாது.  

இதேநேரம், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங், நான் பார்த்த மிகவும் திறமையான வெளிநாட்டு துடுப்பாட்ட வீரர் ஆவார். அவரது துடுப்பாட்டத் திறமை ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தது. அவரை போலவே மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் மற்றும் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரது ஆட்டமும் என்னை பிரம்மிக்க வைத்ததுஎன தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த யுவ்ராஜ், கடந்த 25 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். ஏறக்குறைய 17 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். இதுவே சரியான தருணம் என்று ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். கிரிக்கெட் ஆட்டம் எனக்கு எல்லாவற்றையும் அளித்துள்ளது. அதனால் தான் இன்று இங்கு நிற்கிறேன்.

நான் மிகவும் அதிஷ்டசாலி. இந்திய அணிக்காக 400 போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். நான் விளையாட தொடங்கும் போது இத்தனை போட்டிகளில் விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைத்து பார்த்தது இல்லை.

பாகிஸ்தானை எதிர்கொள்வதில் அச்சமடையும் விராத் கோஹ்லி

பாகிஸ்தான் அணிக்கு எதிராக எதிர்வரும் ………

தற்போது நான் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறேன். .பி.எல். போட்டியில் இனிமேல் விளையாட வேண்டும் என்று நினைக்கவில்லை. வெளிநாடுகளில் நடைபெறும் டி-20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் சபையிடம் அனுமதி கேட்டு இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

இந்திய அணியின் முன்னணி மத்திய வரிசை வீரராகவும், இடக்கை சுழல் பந்துவீச்சாளருமாக திகழ்ந்த யுவ்ராஜ் சிங், கடந்த 2000ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். 37 வயது நிரம்பிய யுவ்ராஜ் சிங், இதுவரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர்கள் உலகக் கிண்ணத்தில் 362 ஓட்டங்களையும், 15 விக்கெட்டுகளையும் வீழ்த்திய யுவ்ராஜ் தொடர்நாயகன் விருது பெற்று அசத்தினார். இதனையடுத்து புற்றுநோய் பாதிப்பில் சிக்கி மீண்டு வந்த அவர் தனது பழைய ஆட்டத்திறனை இழந்தார். இதனால் இந்திய அணியில் இருந்து படிப்படியாக ஓரங்கட்டப்பட்டார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<