மேலதிக 5 கோல்களினால் பொலிஸ் அணியை வீழ்த்திய விமானப்படை மகளிர் அணி

108

பொலிஸ் மகளிர் அணிக்கு எதிராக இடம்பெற்ற டிவிஷன் l பிரீமியர் லீக் போட்டியில் இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழக மகளிர் அணியினர் மேலதிக 5 கோல்களினால் பொலிஸ் விளையாட்டுக் கழக அணியை இலகுவாக வெற்றி கொண்டுள்ளனர்.  

மாதின்னகொட விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் ஆரம்ப கோலை விமானப்படை அணியின் அஷானி ரத்னாயக்க 9ஆவது நிமிடத்தில் பெற்றுக் கொடுத்தார்.

அதற்கு ஐந்து நிமிடங்களின் பின்னர் அணிக்கான இரண்டாவது கோலை வித்யாலனி பெற்றுக் கொடுத்தார். அதன் பின்னர் மீண்டும் அஷானி 33ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலைப் பெற, முதல் பாதியில் விமானப்படை அணி 3 மேலதிக கோல்களினால் முன்னிலை பெற்றது.

முதல் பாதி: விமானப்படை விளையாட்டுக் கழகம் 03 – 00 பொலிஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியில் நீண்ட நேரம் எந்த கோல்களும் பெறப்படாத நிலையில் 67ஆவது நிமிடத்தில் ரதிகா கருணாரத்ன மூலம் தமக்கான முதல் கோலை பொலிஸ் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து 6 நிமிடங்களில் இமேஷா விதானகே ஒரு கொலை விமானப்படை அணிக்காகப் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து மேலும் இரண்டு கோல்களைப் பெற்ற வித்யாலனி தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

முழு நேரம்: விமானப்படை விளையாட்டுக் கழகம் 06 – 01 பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் ராணுவப்படை விளையாட்டுக் கழகம்

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் இரு அணிகளும் ஆட்டம் முடிவுறும்வரை கோல்களைப் பெற்றுக்கொள்ளாமையினால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.