இந்தியாவை அதிர வைத்த எவின் லுவிஸ் : T-20 தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்

1489
Photo Courtesy - Cricinfo

இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு T-20 போட்டியில் எவின் லுவிஸின் அதிரடி சதத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டி தொடரை தம்வசப்படுத்தியது.

இந்த போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் தனது பதினொருவர் அணியில் மாற்றம் கொண்டுவந்தது. போட்டிக்கு முன்னரான காலையில் இடம்பெற்ற பயிற்சியில் சகலதுறை வீரர் ஹார்திக் பாண்டியா காயமடைந்ததால் அந்த இடத்திற்கு ஜடேஜா அழைக்கப்பட்டார்.

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி இலங்கை அணியுடன்…

சபீனா பார்க்கில் ஞாயிறன்று நடந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் பிரத்வயிட் முதலில் களத் தடுப்பைத் தெரிவு செய்தார்

இந்திய அணிக்கு தலைவர் விராட் கோஹ்லி (22 பந்துகளில் 39) மற்றும் ஷிகார் தவான் (12 பந்துகளில் 23) அதிரடியாக ஆடியபோதும் இருவரும் ஆறாவது ஓவரில் வைத்து அடுத்தடுத்து வெளியேறினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்றது.  

தனது இரண்டாவது T-20 சர்வதேச போட்டியில் களமிறங்கிய ரிஷாப் பான்ட் ஓட்டங்களை பெற தடுமாறியதோடு மறுமுனையில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடியதால் இருவருக்கும் இடையில் மூன்றாவது விக்கெட்டுக்கு 86 ஓட்ட இணைப்பாட்டம் பெறப்பட்டது. கார்த்திக் 48 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சாமுவேல்ஸின் பந்துக்கு போல்டானார்.  

அவர் 29 பந்துகளுக்கு முகம்கொடுத்து ஆறு சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பௌண்டரிகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது. அவர் ஆட்டமிழக்கும்போது இந்திய அணி 16 ஓவர்களில் 151 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன்மூலம் இந்திய அணி 200 ஓட்டங்களை தாண்ட வாய்ப்பு இருந்தது.

எனினும் தோனி மற்றும் பான்டின் (35 பந்துகளில் 38) விக்கெட்டுகளை ஜெரொம் டெய்லர் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. பின்னர் வந்த கெதர் ஜாதவ் 4 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். இதன் காரணமாக இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு மொத்தமாக 190 ஓட்டங்களை குவித்தது.

பின்னர், 191 என்ற வாலான இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் இடம்பிடித்தபோதும் லுவிஸ் ஆதிக்கம் செலுத்தினார். அவர் அதிரடியாக பெற்ற 125 ஓட்டங்கள் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி ஒன்பது பந்துகள் எஞ்சிய நிலையில் 194 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

T-20 போட்டிகளுக்காக தேசிய அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ள கிறிஸ் கெயில்

கிங்ஸ்டன் நகரில் உள்ள சபீனா பார் க் கிரிக்கெட் அரங் கில் ஜுலை 9 ஆம் திகதி..

மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அந்த அணி வீரர் ஒருவர் சர்வதேச T-20 சதம் ஒன்றை பெற்றது இது முதல் முறையாகும். இதன்மூலம் இடது கை ஆரம்ப வீரரான லுவிஸ் சர்வதேச T-20 போட்டிகளில் ஒன்றுக்கு மேல் சதங்கள் பெற்ற மூன்றாவது வீரராக இடம்பிடித்தார். இதற்கு முன்னர் சக அணி வீரர் கெயில் மற்றும் நியூஸிலாந்தின் பிரன்டன் மக்கலம் ஆகியோரே இந்த இலக்கை எட்டியுள்ளனர்.  

லுவிஸ் இந்த ஓட்டங்களை பெற 62 பந்துகளுக்கு மாத்திரம் முகம்கொடுத்து 12 சிக்ஸர்கள் மற்றும் ஆறு பௌண்டரிகளை விளாசியமை குறிப்பிடத்தக்கது.

அவர் 11 மாதங்களுக்கு முன்னர் இதே இந்திய அணிக்கு எதிராக போர்ட் லவ்டர்டல்லில் வைத்து 100 ஓட்டங்களை குவித்திருந்தார். இதனால் அந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்போது லுவிஸ் ஆரம்ப விக்கெட்டுக்கு கெயிலுடன் சேர்ந்து 82 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டார். எனினும் மீண்டும் அணிக்கு திரும்பிய கெயில் இந்திய அணியில் தனது கன்னி போட்டியில் களமிறங்கிய குல்தீப் யாதவ்வின் பந்துக்கு 9 ஆவது ஓவரில் 18 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மார்லன் சாமுவேல்ஸ் லுவிஸுக்கு கைகொடுத்து சிறப்பாக ஆடினார். அவர் 29 பந்துகளில் ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இரண்டாவது விக்கெட்டுக்கு பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 112 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டு, 19 ஆவது ஓவரில் மேற்கிந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.  

இதன்போது லுவிஸ் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்துக்கு சிக்ஸர் ஒன்றை விளாசியே, மேற்கிந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன்போது அவர் T-20 சர்வதேச போட்டியில் பதிலெடுத்தாடி அதிகூடிய ஓட்டங்களை பெற்றவராகவும் சாதனை படைத்தார்.  

ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற முடியாமல் போன கவலை எனது மனதில் இருந்தது. என்றாலும் எனது பாணியில் விளையாடினால் சிறப்பாக ஆட முடியும் என்று நம்பினேன். சிறந்த பந்து வீச்சு அணியாக இருப்பதால் இந்தியாவுக்கு எதிராக பெறும் ஓட்டங்கள் வரவேற்க தக்கதாகும் என்று போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றபோது லுவிஸ் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியுடனான போட்டி விபரம்

அனைத்து கிரிக்கெட் இரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்டிருக்கும்..

எவ்வாறாயினும் டிரினிடாட் மற்றும் டொபாகோவை சேர்ந்த 25 வயதான லுவிஸின் இரண்டு பிடியெடுப்புகளை இந்தியா தவறவிட்டது அவர் ஓட்டங்களை குவிக்க உதவியது. முஹமது ஷமி மற்றும் டினேஷ் கார்த்திக் ஆகியோர் பௌண்டரி எல்லையில் வைத்து பிடியெடுப்புகளை தவறவிட்டனர்.  

அதேபோன்று, கெயில் ஒரு ஓட்டத்துடன் இருந்த போது மஹேந்திர சிங் தோனி அவரது ஸ்டம்ப் வாய்ப்பொன்றை தவறவிட்டதோடு சமுவேல்ஸின் ஆட்டமிழப்பு வாய்ப்புகளையும் இந்திய அணி பறிகொடுத்தது.   

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 3-1 என தோற்றபோதும் T-20 போட்டியில் கெயில் அழைக்கப்பட்டது அந்த அணியின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. கெயில் 15 மாதங்களுக்கு முன் கொல்கத்தாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான T-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு பின்னரே அணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.