ஆசிய இளையோர் பளுதூக்கலில் இலங்கை வீரர்களுக்கு தடை

124

உஸ்பகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய இளையோர் பளுதூக்கல் போட்டிகளில் பங்கேற்றிருந்த இலங்கை வீரர்களின் ஊக்கமருந்து பரிசோதனை தொடர்பான தகவல்களை உலக ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையத்துக்கு (World Anti-Doping Agency – WADA) வழங்கத் தவறிய காரணத்தால் குறித்த போட்டித் தொடரிலிருந்து இலங்கை வீரர்களை நீக்குவதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 12 இலங்கை வீரர்கள்

ஜப்பானின் கிபு நகரில் எதிர்வரும் ஜுன் மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை ……

எதிர்வரும் ஒக்டோபார் மாதம் ஆர்ஜென்டீனாவில் நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆசிய நாடுகளின் தகுதிகாண் போட்டிகளாக ஆசிய இளையோர் பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றது.

இப் போட்டித் தொடருக்காக இலங்கையிலிருந்து எஸ்.டி சோமதிலக, டி.சி விமலரத்ன, பி.டி ஸ்ரீமால், யு.ஆர் குணதிலக்க மற்றும் யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் வி. ஆஷிகா உள்ளிட்ட 5 வீர வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

பொதுவாக சர்வதேச போட்டிகளின் போது பளுதூக்கல் வீரர்களுக்கான ஊக்கமருந்து பரிசோதனை தொடர்பில் உலக ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையம் கூடிய அவதானம் செலுத்தும்.

இதற்காக வீரர்களை தெளிவுபடுத்தி அவர்களது தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கு ஊக்கமருந்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ முறைமை (Anti-Doping Administration & Management System – ADAMS) என்று அழைக்கப்படுகின்ற விசேட அறிக்கை ஒன்றை உலக ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையம் முன்னெடுத்து வருகின்றது. இதில் குறித்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளும் தங்களது வீரர்களது தகவல்கள் மற்றும் ஊக்கமருந்து பரிசோதனை தொடர்பிலான தரவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

மேலும் பல உள்ளூர் செய்திகளைப் படிக்க

ஆனால், இம்முறை ஆசிய இளையோர் பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றிருந்த இலங்கை வீரர்களது ஊக்கமருந்து பரிசோதனை (ADAMS) தொடர்பான தரவுகளை பதிவேற்றம் செய்வதற்கு இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையம் தவறிவிட்டது. இதனையடுத்து குறித்த வீரர்களுக்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதிப்பதற்கு உலக ஊக்கமருந்து முகவர் தடுப்பு முகவர் நிலையம் (WADA) நடவடிக்கை எடுத்தது.

இலங்கை மாத்திரமல்லாது இன்னும் 11 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் இவ்வாறு தடை விதிப்பதற்கு உலக ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா எமது இணையத்தளத்து வழங்கிய விசேட செவ்வியில்,

”உலகில் உள்ள அனைத்து வீரர்களது ஊக்கமருந்து பரிசோதனை தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் இருந்து பெற்றுக் கொள்வதற்காகவே ஊக்கமருந்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, அனைத்து வீரர்களுக்கும் தமது தரவுகளை பதிவேற்றம் செய்வதற்கான (LOGIN) அனுமதியும், அதற்கான இரகசிய இலக்கமும்(PASSWORD) இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையத்தினால் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்த தரவுகளை வீரர்கள் பதிவேற்றம் செய்த பிறகு இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையத்தினால் அவை பிரதான பகுதிக்கு உள்வாங்கப்படும். அதன்பிறகு ஒவ்வொரு வீரர்களினதும் உயிரியல் கடவுச்சீட்டாக அது மாற்றம் பெறும்.

புகைப்படங்களைப் பார்வையிட

ஆனால், ஆசிய இளையோர் பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்களது ஊக்கமருந்து பரிசோதனை தொடர்பான தரவுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. உண்மையில் இது மிகப் பெரிய குற்றமாகும். அவர்களுக்கு எதிராக போட்டித் தடையோ அல்லது தண்டப் பணமோ அறிவிடப்படாவிட்டாலும் அவர்களால் குறித்த போட்டிகளில் பங்கேற்க முடியாது போனது. இது மற்ற வீரர்களுக்கு சிறந்த பாடமாக அமையும்” என அவர் தெரிவித்தார்.

இறுதியில், பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் ஆசிய போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இலங்கை இளையோர் பளுதூக்கல் வீரர்களின் ஒலிம்பிக் கனவு ஏமாற்றத்தைக் கொடுத்தது. எனவே, எதிர்வரும் காலத்திலும் இதுபோன்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு அதிகாரிகள் கூடிய அவதானம் செலுத்த வேண்டும்.