உபாதைக்குள்ளான உஸ்மான் கவாஜா குறித்து ஆரோன் பின்ச்

351
AFP

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு அவுஸ்திரேலிய  அணி தெரிவாகியுள்ள போதிலும், அவ்வணி தமது கடைசி லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணியுடன் 10 ஓட்டங்களால் தோல்வியினை தழுவி, உலகக் கிண்ண அணிகள் நிரல்படுத்தலில் இரண்டாம் இடத்தினை பெற்றவாறு உலகக் கிண்ண லீக் போட்டிகளை நிறைவு செய்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ண அரையிறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணியை பர்மிங்ஹம் நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை (11) எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், தென்னாபிரிக்க அணியுடனான லீக் போட்டி பற்றி அவுஸ்திரேலிய அணியின் தலைவரான ஆரோன் பின்ச் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

ஆஸியுடனான வெற்றியுடன் உலகக் கிண்ணத்தை நிறைவு செய்த தென்னாபிரிக்கா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 45ஆவது லீக் போட்டியில், அவுஸ்திரேலிய அணியினை…

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 325 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. எனினும், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 326 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 315 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தோல்வியைத் தழுவியது.

இதன்போது இப்போட்டியில் உபாதை ஒன்றினையும், எதிர்கொண்டு துடுப்பாட்டத்திலும் ஜொலிக்கத் தவறிய உஸ்மான் கவாஜா தொடர்பில் ஆரோன் பின்ச் கதைத்திருந்தார். உஸ்மான் கவாஜா தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 18 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், தென்னாபிரிக்க போட்டியில் உபாதை ஒன்றை சந்தித்த அவுஸ்திரேலிய அணியின் ஏனைய வீரரான மார்கஸ் ஸ்டொய்னிஸ் தொடர்பிலான விபரங்களும் ஞாயிற்றுக்கிழமை (7) வெளியிடப்படும் என ஆரோன் பின்ச் குறிப்பிட்டிருந்தார்.

“உண்மையை சொல்லப் போனால், எல்லாவிதத்திலும் உஸ்மான் கவாஜா நல்ல நிலையில் இல்லை. இது மாதிரியான உபாதை ஒன்றுக்கு அவர் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் முகம் கொடுத்திருக்கின்றார். இப்போட்டியில் (அவர்) அடைந்த உபாதையும் அதேமாதிரியானது. ஆனால், (உஸ்மானுக்கு பதிலாக) பிரதியீடுகள் குறித்து எண்ணும் போது அதற்கான நேரம் எம்மிடம் இல்லை. மார்கஸூம் ஒருவகையான வலியினை உணர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பிரதியீடுகள் குறித்து பேசுவதற்கு எங்களுக்கு அவர்களின் முழுமையான விபரங்கள் தேவை. எமக்கு அவை ஞாயிற்றுக்கிழமை (7) கிடைக்கும்.

ஆரோன் பின்ச், தென்னாபிரிக்க அணியுடனான போட்டி தவிர தாம் உலகக் கிண்ணத்தின் அரையிறுதி சுற்றில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி பற்றி, குறிப்பிடும் போது அது மிக சிறப்பாக அமையும்” எனத் தெரிவித்திருந்தார்.

(அரையிறுதி போட்டி) மிக பிரம்மாண்டமாக அமையும். அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள் மோதுவதை விட உலகக் கிண்ண அரையிறுதி போட்டி பெரிதாக அமைந்துவிடாது. எங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாடியது அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்கான நம்பிக்கையை  தந்திருந்தது.

அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியும், அவுஸ்திரேலிய அணியும் இந்த உலகக் கிண்ணத் தொடரில் இரண்டு தடவைகள் மோதியிருந்தன. இதில் ஒரு போட்டி உலகக் கிண்ண பயிற்சி ஆட்டமாக அமைந்ததோடு, மற்றைய போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் மோதலாக அமைந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணியே வெற்றியை சுவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரோஹித்தின் சாதனை சதத்துடன் இந்தியாவுக்கு இலகு வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் லீட்ஸ் – ஹெடிங்லி மைதானத்தில்…

அரையிறுதிப் போட்டிக்காக இப்போது இருந்தே, அதிகமாக கவனம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இங்கிலாந்து அணி,  நல்ல நிலையில் இப்போது காணப்படுகின்றது. எனவே, நாம் அவர்களை வீழ்த்த வேண்டுமெனில் எமது மிகச் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், இது சுவாரசியமாக இருக்க போகின்றது. எப்போதாவது அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடினால் அது சுவாரசியமாகவே இருக்கும். (அரையிறுதிப் போட்டி இடம்பெறவுள்ள) பர்மிங்ஹம் நகரிலும் அதே நிலைமையே, அங்கே அதிக பார்வையாளர்களுக்கு மத்தியில் ஆடுவது மகிழ்ச்சியான ஒன்று. இரண்டு அணிகளுக்கும் அங்கே பெரியளவிலான ஆதரவும் இருக்கும். இது நல்ல நிலைமைகளில் விளையாடப்படும் வண்ணமயமான போட்டியாக இருக்கும் என ஆரோன் பின்ச் தாம் இங்கிலாந்து அணியுடன் விளையாடப் போகும் உலகக் கிண்ண அரையிறுதி தொடர்பில் மேலதிக கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<