பாக். மகளிரை இலகுவாக வெற்றி கொண்ட இலங்கை மகளிர் அணி

630
2nd T20I - Sri Lanka Women v Pakistan Women

பாகிஸ்தான் மகளிர் அணியுடனான இரண்டாவது T20 போட்டியில் 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய இலங்கை மகளிர் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்துள்ளது.

[rev_slider LOLC]

இதன்போது அனுபவ வீராங்கனை ஷஷிகலா சிறிவர்தனவின் அபார பந்துவீச்சால் பாகிஸ்தான அணியை 72 ஓட்டங்களுக்கே சுருட்டிய இலங்கை மகளிர் அணி, வெற்றி இலக்கை நெருக்கடி இன்றி எட்டியது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் மகளிர் அணியுடனான ஒரு நாள் தொடரை முழுமையாக தோற்ற இலங்கை மகளிர் அணி, T20 தொடரின் முதல் போட்டியிலும் தோல்வி கண்டது. எனவே, பாகிஸ்தானின் இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை பெரும் முதல் வெற்றியாக இன்றைய வெற்றி பதிவாகின்றது.

முதல் T20யில் இலங்கை மகளிர் அணியை போராடி வென்றது பாகிஸ்தான்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும்..

கொழும்பு, SSC மைதானத்தில் இன்று (30) நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித் தலைவி பிஸ்மாஹ் மஹ்ரூப் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

எனினும், 16 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் மகளிர் அணி 8ஆவது ஓவரை வீசவந்த சுழற்பந்து வீராங்கனை ஷஷிகலாவின் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

மத்திய ஓவர்களில் அணித் தலைவி பிஸ்மாஹ் ஓட்டங்களை கட்டியெழுப்ப தனித்து போராடினாலும் மறுமுனையில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. கடந்த போட்டியில் அரைச்சதம் பெற்ற ஜவேரியா கான் (03), அடுத்து வந்த நிதா தார் (04) மற்றும் கைனத் இம்டியாஸ் (01) ஆகியோர் ஒற்றை இலக்கங்களோடே வெளியேறினர்.

இந்நிலையில் பொறுப்புடன் ஆடி வந்த பிஸ்மாஹ்வும் ஷஷிகலாவின் பந்தில் சிக்கி ஆட்டமிழந்தபோது பாக். அணியின் கடைசி எதிர்பார்ப்பும் சிதறியது. பிஸ்மாஹ் 16 பந்துகளில் ஒரு பௌண்டரியுடன் 20 ஓட்டங்களை எடுத்தார். இவர் தவிர பாக். அணிக்காக ஆரம்ப வீராங்கனை சித்ரா அமீன் (10) மற்றும் சானா மிர் (13) இருவருமே இரட்டை இலக்க ஓட்டத்தை பெற்றனர்.

இதன்மூலம் 18.4 ஓவர்களிலேயே பாக். மகளிர் அணி 72 ஓட்டங்களுக்கு சுருண்டது. இது இலங்கை மகளிர் அணிக்கு எதிராக அந்த அணி பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்களாகும்.

கிரிக்கெட் அரங்கில் பந்தை சேதப்படுத்திய கிரிக்கெட் பிரபலங்கள்

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் விளையாட்டு..

இதன்போது இலங்கை மகளிர் அணி சார்பில் ஷஷிகலா 3.4 ஓவர்களில் 9 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இது T-20 சர்வதேச போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சாகும். அதேபோன்று, மற்றொரு சுழற்பந்து வீராங்கனையான சுகன்திகா குமாரி 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு ஆரம்ப வீராங்கனை அனுஷ்கா சஞ்சீவனி 27 பந்துகளில் 20 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். மறுமுனையில் அணித் தலைவி சமரி அத்தபத்து (13) மற்றும் முதல் வரிசையில் இமல்கா மெண்டிஸ் (11) முன்கூட்டியே ஆட்டமிழந்தபோதும் இலங்கை அணியின் வெற்றிக்கு அது நெருக்கடி தரவில்லை.

சற்று நிதானமாக ஆடிய ரொபெகா வெண்டோட் இலங்கை அணியின் வெற்றி வரை களத்தில் இருந்தார். இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 14.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 73 ஓட்டங்களை எட்டியது. ரெபெகா ஆட்டமிழக்காது 29 பந்துகளில் 19 ஓட்டங்களைப் பெற்றார்.

தற்பொழுது தொடர் 1-1 என சமநிலையடைந்துள்ள நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் கடைசியுமான T20 சர்வதேச போட்டி நாளை (31) கொழும்பு, SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றி விடும்.

Scorecard