பாகிஸ்தானிடம் பெற்ற தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

1165
SLvPAK

நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டி நாளைய தினம் (07) இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பிரிஸ்டோல் கௌண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை அணியின் வெற்றியினை பாராட்டும் கிரிக்கெட் பிரபலங்கள்

ஆப்கானிஸ்தான் அணியினை த்ரில்லரான ……..

நாளைய தினம் நேருக்கு நேர் மோதவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளது கடந்தகால போட்டி முடிவுகள் அணிகளை பலமாக காட்டாவிட்டாலும், அவர்களின் திடீர் எழுச்சிகள் இரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும் என்பதில் எவ்வித ஐயங்களும் இல்லை.

உதாரணமாக, 2017ம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு செல்லும் போது, பாகிஸ்தான் அணி கிண்ணத்தை வெல்லும் என எவரும் கணிக்கவில்லை. ஆனால், அங்கு சென்று பலமான அணிகளை வீழ்த்தி சம்பியனானது. அதே தொடரில் இலங்கை அணி பலவீனமாக அணியாக களமிறங்கிய போதும், பலமான இந்திய அணியை வீழ்த்தியதுடன், அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டிருந்தது.

இவ்வாறு இரண்டு அணிகளிடமும் உள்ள போராட்ட குணத்தை இந்த உலகக் கிண்ணத்தின் முதல் இரண்டு போட்டிகளிலும் காணமுடிந்தது. நியூசிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்த இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சராசரிக்கு குறைவான ஓட்டங்களை பெற்றிருந்த போதும், தங்களுடைய அபார பந்துவீச்சின் மூலம் 187 என்ற வெற்றியிலக்கினை கட்டுப்படுத்தியிருந்தது.

அதேபோன்று, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி, 105 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 300 இற்கும் அதிகமான ஓட்டங்களை குவித்து, இங்கிலாந்து அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியிருந்தது. மேற்குறித்தவாறு மோசமான ஆரம்பத்தை பெற்றிருந்த இந்த இரண்டு அணிகளும் , ஒரு போட்டியின் வெற்றியின் மூலம் தங்களுக்குள் முழு நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

இலங்கை அணியை பொருத்தவரை, வேகப் பந்துவீச்சாளர்கள் அணிக்குள் புதிய உத்வேகத்தை கொண்டுவந்துள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அழைக்கப்பட்டிருந்த நுவான் பிரதீப் அவருடன் குறித்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மாலிங்க ஆகியோர் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு பலம் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. அத்துடன், ஆப்கான் போட்டியில் இலங்கை அணியின் களத்தடுப்பு சற்று பேசக்கூடியதாக இருந்தது. குறிப்பாக திமுத் கருணாரத்ன மேற்கொண்ட ரன்-அவுட் மூலமான ஆட்டமிழப்பு மற்றும் திசர பெரேராவின் பிடியெடுப்பு.

ஆனால், இலங்கை அணியின் துடுப்பாட்டம் அணிக்கு மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கான் போட்டியில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை குவித்த போதும், மத்தியவரிசை வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டினை விட்டுக்கொடுத்து அணிக்கு ஏமாற்றத்தை வழங்கியிருந்தனர். இந்தநிலையில், அஞ்செலோ மெதிவ்ஸ் துடுப்பாட்டத்தில் தன்னுடைய அனுபவத்தை வெளிக்காட்ட வேண்டும் என்பதுடன், குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா மற்றும் லஹிரு திரிமான்னே ஆகியோரும் அணியின் துடுப்பாட்டத்துக்கு வலுசேர்க்கவேண்டிய கட்டயாத்தில் உள்ளனர்.

ஆனால், பாகிஸ்தான் அணியை பார்க்கும் போது, முதல் போட்டியிலிருந்து அந்த அணி தங்களுடைய பந்துவீச்சிலும் சரி, துடுப்பாட்டத்திலும் சரி அதிகமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. முதல் போட்டியில் 105 ஓட்டங்களுக்கு சுருண்ட அந்த அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 348 என்ற சவாலான இலக்கை பெற்றிருந்தது. அத்துடன், வஹாப் றியாஸ் மற்றும் மொஹமட் ஆமிர் ஆகியோர் அனுபவ ரீதியில் சிறப்பாக உள்ளதுடன், ஏனைய பந்துவீச்சாளர்களும் பலமாக உள்ளனர்.

Photos: CWC19 – Sri Lanka training session ahead of Pakistan match

இவ்வாறான நிலையில், இலங்கை அணி நாளைய போட்டியில் தங்களை முன்னிலைப்படுத்த வேண்டுமானால், துடுப்பாட்ட வீரர்கள் நிச்சயமாக அணிக்கு தங்களுடைய பங்கினை சரிவர நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு துடுப்பாட்ட வீரர்கள் செயற்படும் போது, பந்து வீச்சாளர்களால் மன உறுதியுடன் பந்துவீச முடியும் என்பதுடன், எதிணிக்கும் சவால்களை கொடுக்க முடியும்.

இரு அணிகளதும் ஒருநாள் போட்டி மோதல்கள்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்றுள்ள சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிப்பங்கினை பாகிஸ்தான் அணி கொண்டிருக்கிறது.  மொத்தமாக 2 அணிகளும் 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், பாகிஸ்தான் அணி 90 போட்டிகளிலும், இலங்கை அணி 58 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

அதுமாத்திரமின்றி, இரண்டு அணிகளதும் உலகக் கிண்ண மோதல்களை பார்க்கும் போது, இலங்கை அணி எந்வொரு சந்தர்ப்பத்திலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியிருக்கவில்லை. இதுவரையில், 7 உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை, இலங்கை எதிர்கொண்டு குறித்த அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

அத்துடன், இலங்கை அணி இறுதியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடிய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் (2017) 0-5 என வைட்வொஷ் ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான நிலையில், உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுடனான தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.

எதிர்பார்ப்பு வீரர்கள்

குசல் பெரேரா

இலங்கை அணியின் பந்துவீச்சு பக்கத்தை பலப்படுத்துவதற்கு நுவான் பிரதீப், மாலிங்க, இசுரு உதான என பலர் பங்களிப்பை செலுத்தி வரும் நிலையில், குசல் பெரேரா மாத்திரமே சற்று நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடி வருகின்றார். குறிப்பாக முதல் போட்டியில் திமுத் கருணாரத்னவுக்கு அடுத்தப்படியாக 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த இவர், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி 78 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

அத்துடன், எந்த பந்துவீச்சாளருக்கும் அச்சுறுத்தலை விடுக்கக்கூடிய துடுப்பாட்ட வீரராக குசல் பெரோ உள்ளதுடன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு தனது துடுப்பாட்டத்தின் மூலம் பங்களிப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாபர் அஷாம்

பாகிஸ்தான் அணியின் பாபார் அஷாம் அந்த அணியின் துடுப்பாட்ட தூணாக பார்க்கப்படுகிறார். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் 50 இற்கும் அதிகமான ஓட்ட சராசரியை கொண்டுள்ள இவர், இங்கிலாந்து ஆடுகளங்களில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகின்றார். இதனை, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பார்க்க முடிந்தது.

இவ்வாறிருக்கையில், நாளைய போட்டியில் தனது துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை அணிக்கு சவால் விடுப்பதுடன், அணியின் மத்தியவரிசை துடுப்பாட்டத்தையும் இவர் பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச பதினொருவர்

இலங்கை அணியில் ஆப்கானிஸ்தான் போட்டியிலிருந்து ஒரு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக உள்ள சுரங்க லக்மால் அணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிஸ் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.

இலங்கை

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதான, லசித் மாலிங்க, நுவன் பிரதீப்

பாகிஸ்தான் அணியை பொருத்தவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததால், எவ்வித மாற்றங்களும் நிகழாது என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான்

பகர் சமான், இமாமுல் ஹக், பாபர் அஸாம், சர்பராஸ் அஹமட் (தலைவர்), ஆசிப் அலி, சுஹைப் மலிக், மொஹமட் ஹபீஸ், சதாப் கான், ஹஸன் அலி, வஹாப் றியாஸ், முஹமட் ஆமிர்

ஆடுகளம் மற்றும் காலநிலை

பிரிஸ்டோல் மைதானத்தின் ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக இந்த மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியிருந்தன.  இதில், பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 359 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை இங்கிலாந்து அணி துரத்திப்பெற்றிருந்தது. அத்துடன் இந்த மைதானத்தில் நடைபெற் 18 ஒருநாள் போட்டிகளில் 7 தடவைகள் 300 இற்கும் அதிகமான ஓட்டங்கள் பெறப்பட்டுள்ளன.

இதேவேளை, காலநிலையை பொருத்தவரை, போட்டியில் மழை குறுக்கிடுவதற்கான 90 சதவீதமான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<