தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இலங்கை?

1717
SLvENG 3rd ODI Preview

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வியடைந்த இலங்கை கிரிக்கெட் அணி தங்களது மோசமான ஒருநாள் சாதனையுடன் நாளை (17) மூன்றாவது ஒருநாள் போட்டியை எதிர்கொள்கிறது.

இலங்கை அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் பெற்றிருந்த தொடர் தோல்வியினை நீடித்திருந்தது.

மாலிங்கவின் அபார பந்துவீச்சு வீண்: துடுப்பாட்டத்தின் தவறுகளால் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான …

இவ்வாறு, தம்புள்ளை மைதானத்தில் பெறப்பட்டுள்ள மோசமான சாதனைகளும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் தொடர் தோல்விகளும் இலங்கை அணியை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.  

ஆனால், ஒருநாள் போட்டிகளில் முதற்தர அணிகளை வீழ்த்தி, தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி, தற்போது துணைக் கண்டத்தில் இலங்கை அணியையும், முடிவு கிடைத்த முதல் போட்டியில் இலகுவாக வெற்றிக்கொண்டு தங்களது பலத்தை நிரூபித்துள்ளது.

இங்கிலாந்து அணியை பொருத்தவரையில் தம்புள்ளையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் மாலிங்கவின் அபாரமான பந்து வீச்சையும்  தாண்டி துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் சிறப்பாக செயற்பட்டிருந்தது. முக்கியமாக இலங்கை அணியின் ஆயுதமான சுழற்பந்து வீச்சையும் அற்புதமாக எதிர்கொண்டு சவால் விடுத்திருந்தது.

தற்போது அனைத்து துறையிலும் தங்களது பலத்தை அதிகரித்துக் கொண்டுள்ள இங்கிலாந்து அணி, மிகப்பெரிய சவாலை இலங்கை முன் வைத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் குசல் பெரேரா விளையாடுவது சந்தேகம்

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் …

அனுபவ வீரர்களான அணித் தலைவர் இயன் மோர்கன், ஜோ ரூட் ஆகியோர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தி வருவதுடன் கிரிஸ் வோகஸ் மற்றும் புதுமுக வீரர் ஒல்லி ஸ்டோன் ஆகியோர் வேகப்பந்து வீச்சை பலப்படுத்துகின்றனர்.

இலங்கை அணி தங்களது முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டங்களால் பின்னடைவை சந்தித்து வருகிறது. அனுபவ வீரர் உபுல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல,  தினேஷ் சந்திமால் மற்றும் குசல் பெரேரா ஆகியோர் தொடர்ச்சியாக ஓட்டங்களை குவிக்கத் தவருகின்றனர். துடுப்பாட்டம் மாத்திரமின்றி,  இலங்கை அணியின் களத்தடுப்பில் விடப்பட்டுவரும் தவறுகளும் அணியை மேலும் பின்னடைவை நோக்கி அழைத்துச் சென்றுள்ளது.

எனினும், இரண்டாவது ஒருநாள் போட்டியின் பின்னர் லசித் மாலிங்கவின் பந்து வீச்சு மற்றும் தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா ஆகியோரின் சகலதுறை ஆட்டங்கள் அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன.

எவ்வாறாயினும், ஒவ்வொரு போட்டியிலும் அணியின் ஓரிரு வீரர்கள் மாத்திரம் சிறப்பாக செயற்பட, ஏனைய வீரர்கள் தங்களது பங்களிப்பை வழங்க தவறி வருகின்றனர். இதனால், பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை அணி மாறுபட்ட திட்டங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லசித் மாலிங்க ஒரு தனித்துவமான பந்துவீச்சாளர் – இயன் மோர்கன்

சனிக்கிழமை (13) தம்புள்ளையில் நடைபெற்ற …

நாளைய போட்டியை பொருத்தவரையில் இலங்கை அணியில், சகல இடங்களிலும் துடுப்பாடக்கூடிய இடது கை அதிரடி ஆட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, தனது  தொடையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக மற்றொரு துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம அணியில் இணைக்கப்படுவார்.

அதேபோன்று, சுழற்பந்து வீச்சாளர் லக்ஷான் சந்தகனுக்கு பதிலாக அமில அபோன்சோ அணியில் இணைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மூன்றாவது போட்டிக்கான இலங்கை உத்தேச பதினொருவர்

உபுல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால் (தலைவர்), சதீர சமரவிக்ரம, தசுன் சானக, திசர பெரேரா, அகில தனன்ஜய, அமில அபோன்சோ , துஷ்மந்த சமீர, லசித் மாலிங்க

இரண்டாவது போட்டிக்கான இங்கிலாந்து உத்தேச பதினொருவர்

ஜேசன் ரோய், ஜொனி பெயார்ஸ்டோவ், ஜோ ரூட், இயன் மோர்கன் (தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொஹீன் அலி, அடில் ரஷீட், செம் கரன், கிரிஸ் வோகஸ், மார்க் வூட்   

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…