கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு முதல் வெற்றி

1088

டுபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்ற கட்புலனற்றோருக்கான ஐந்தாவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பங்குபற்றிய முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 303  ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

5ஆவது கட்புலனற்றோர் உலகக்கிண்ணம் ஜனவரி 9 முதல் டுபாயில்

டுபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள..

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் முதன்முறையாக நேபாளம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் இம்முறை போட்டித் தொடர் டுபாய் மற்றும் பாகிஸ்தானில் நேற்றுமுன்தினம்(09) ஆரம்பமாகியது.

இந்நிலையில், டுபாயின் அஜ்மான் ஓவல் மைதானத்தில் நேற்று(09) நடைபெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியானது ஆரம்பத்தில் சீரற்ற காலநிலையால் தடைப்பட்டது. இதனையடுத்து 35 ஓவர்களைக் கொண்ட போட்டியாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் சந்தன தேசப்பிரிய முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். இதில் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை ஆரம்பம் முதல் துவம்சம் செய்து துடுப்பாட்டத்தில் வானவேடிக்கை நிகழ்த்திய பி 3 பிரிவைச் சேர்ந்த இடதுகை துடுப்பாட்ட வீரரான சுரங்க சம்பத், 12 பௌண்டரிகளுடன் 130 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.  

மறுமுனையில் சம்பத்துடன் இணைந்து ஓட்ட குவிப்பில் ஈடுபட்ட பி 2 பிரிவைச் சேர்ந்த ருவன் வசந்த 111 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இதன்படி, இலங்கை கற்புலனற்றோர் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 485 ஓட்டங்களைக் குவித்தது.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக டேனியல் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இதன்படி, 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை..

பின்னர் 486 என்ற பாரிய இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 29.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. அவ்வணி சார்பாக ஸ்டெபான் ப்லமர் 49 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

இதில் அவுஸ்திரேலியாவின் முதல் மூன்று முக்கிய விக்கெட்டுக்களை பி 2 பிரிவைச் சேர்ந்த உபுல் சன்ஜீவ கைப்பற்றியிருந்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக சுரங்க சம்பத் தெரிவானார்.

இந்நிலையில் போட்டியின் பிறகு இலங்கை கற்புலனற்றோர் அணியின் தலைவர் சந்தன தேசப்பிரிய எமது இணையத்துக்கு வழங்கிய செவ்வியில், அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் வெற்றிபெறக் கிடைத்தமை உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. சுரங்க சம்பத் மற்றும் ருவன் வசந்த ஆகியோர் சிறப்பாக விளையாடியிருந்தனர். எனவே பிரபல இந்திய அணியுடன் இன்று(10) நடைபெறவுள்ள 2ஆவது போட்டியில் வெற்றி பெறுவதற்கு எமது அணி முழு பலத்தையும் பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளது” என அவர் தெரிவித்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 485/7 (35)சுரங்க சம்பத் 130, ருவன் வசந்த 111, டேனியல் 2/95

அவுஸ்திரேலியா – 182/10 (29.4)ஸ்டெபான் ப்லமர் 49, உபுல் சன்ஜீவ 3/31