உலகக் கிண்ணத்தில் சுற்றாடல் காப்பிற்கான ஜேர்சியை பயன்படுத்தவுள்ள இலங்கை

1004
Sri Lanka unveil

இலங்கை கிரிக்கெட் அணி 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் பயன்படுத்தவுள்ள உத்தியோகபூர்வ சீருடையினையும் (ஜேர்சி), பயிற்சி சீருடையினையும் இன்று (3) வெளியிட்டுள்ளது. உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியினர் பயன்படுத்தவுள்ள சீருடைகள் சுற்றாடலுக்கு  தீங்கு ஏற்டுத்தாத (Eco-Friendly) வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளன.

தென்னாபிரிக்க தொடரைப் போல உலகக் கிண்ணத்திலும் பிரகாசிப்பேன் – இசுறு உதான

இலங்கை அணிக்காக 2012 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், 2009 ஆம்..

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆடை பங்களார்களான மாஸ் ஹொல்டிங்ஸ் நிறுவனத்தினர், இலங்கையின் கடற்பரப்பில் இலங்கை கடற்படையின் உதவியோடு சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மீள்சுழற்சி செய்து உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் சீருடைகளை தயாரித்திருக்கின்றனர். இதன் மூலம் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய மூலப் பொருட்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் சீருடைகள் பற்றி பேசிய மாஸ் ஹொல்டிங்ஸ் நிறுவனத்தின் முக்கிய உத்தியோகத்தர்களில் ஒருவர், கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்காக கடல் பிளாஸ்டிக்கினால் உற்பத்தி செய்யப்பட்ட இந்த சீருடைகள் மூலம் புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்கியதில் சந்தோஷம் அடைவதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆடை உற்பத்தியில் உலகின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாகவுள்ள மாஸ் ஹொல்டிங்ஸ், இலங்கை கிரிக்கெட் அணியுடன் நீண்ட காலப் பங்களார்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இலங்கை அணியின் முதன்மை அனுசரணையாளர்களாக இந்தியாவின் கென்ட் ஆர்.ஓ (Kent RO) நிறுவனம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு முதல்தடவையாக அனுசரணை வழங்கும்  கென்ட் ஆர்.ஓ (Kent RO) நிறுவனம் இந்தியாவில் ஆர்.ஓ. தொழில்நுட்பம் மூலம் நீர்ச்சுத்திகரிப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் திகழ்கின்றது. மேலும், இந்த நிறுவனம் உலகக் கிண்ணத்தின் பின்னரும் இலங்கை அணியுடன் தமது பயணத்தை தொடர்வதை எதிர்பார்க்கின்றது.

>>Photos : Partnering Sri Lanka’s Cricket World Cup Campaign 2019<<

கென்ட் ஆர்.ஓ தொகுதியின் இயக்குனரான வருண் குப்தா, இலங்கை அணியுடன் இணைந்து செயற்படுவதில் பெருமையுடன் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதேநேரம் இலங்கை கிரிக்கெட் சபையும் மாஸ் ஹொல்டிங்ஸ், கென்ட் போன்ற வர்த்தக துறையில் கொடிகட்டிப்பறக்கும் உறுதியான நிறுவனங்களின் ஆதரவினைப் பெறுவதை கௌரவமாக கருதுவதாக தெரிவித்திருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் உதவி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்..

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் இம் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் இலங்கை அணி, உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் ஜுன் மாதம் 01ஆம் திகதி கார்டிப் நகரில் வைத்து நியூசிலாந்தை எதிர்கொள்கின்றது.

அதேநேரம் இந்த உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக ஸ்கொட்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் ஆடும் இலங்கை அணி, உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிகள் இரண்டிலும் பங்கேற்கவுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<