இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது.

7 டி20 போட்டிகள் கொண்ட, இந்த போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டித் தொடரில் விளையாடும் மூன்று அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை மோதவுள்ளது. இதில் வெற்றி பெற்று முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் இந்த போட்டித் தொடருக்கு ‘சுதந்திரக் கிண்ணம்’ (நிதஹஸ் குசலான) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்போட்டித் தொடருக்கான கூட்டு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் மூன்று நாடுகளினதும் கிரிக்கெட் சபைகளின் தலைவர்களின் பங்கேற்புடன் கொழும்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் வைத்து அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் சபை, இப்போட்டித் தொடருக்கான போட்டி அட்டவணையை இன்று (18) வெளியிட்டுள்ளது.

இந்த தொடரில் கலந்து கொள்வது குறித்து BCCI இன் தலைமை நிறைவேற்று அதிகாரி ராகுல் ஜோர்ஹி கருத்து வெளியிடுகையில் ”இலங்கையின் 70ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் சிறப்புரிமை பெற்றவர்களில் நாங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவுள்ளோம். இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால இந்த யோசனையை முன்வைத்த உடனேயே நாம் அதை ஏற்றுக்கொண்டோம். உண்மையில் இலங்கைக்கு இந்தியாவை விட சிறந்த நண்பர் வேறு யாரும் இருக்க முடியாது” என்றார்.

பந்து வீச்சு, துடுப்பாட்டம் என இரண்டு துறைகளிலும் அசத்திய இலங்கை

இந்நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ”பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இதுவரையான வெற்றிப் பயணத்துக்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளும் வழங்கி வருகின்ற பங்களிப்பை மறக்க முடியாது. இலங்கையும் பங்களாதேஷும் சிறந்த கிரிக்கெட் நண்பர்கள் என்பதை நிரூபிப்பதற்கு இதுதான் சிறந்த தருணம்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் 50ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 1998ஆம் ஆண்டு சுதந்திரக் கிண்ணம் என்ற பெயரில் முதற்தடவையாக கிரிக்கெட் தொடரொன்றை தற்போதைய கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவின் யோசனைக்கமைய ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்றிருந்தன. அத்துடன் இறுதிப் போட்டியில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணியை, 6 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது. எனினும், 1997ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சுதந்திர கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்நிலையில், சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த வருடம் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடர் குறித்து திலங்க சுமதிபால கருத்து தெரிவிக்கையில், 70 வருடங்கள் என்பது மிகப் பெரிய பயணம். அந்த வெற்றிப் பயணத்தை மிகவும் விமர்சையாகக் கொண்டாடுவது முக்கியமானது. எனவே இப்பயணத்தில் எமக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களாக இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் விளங்கியதுடன், அந்த நாடுகள் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த தொடரானது முக்கிய மைல்கல்லாக அமையவுள்ளதுடன், எதிர்கால கிரிக்கெட்டில் முன்னேற்றகரமான நல்ல விடயங்கள் இடம்பெறுவதற்கும் இது உதவியாக இருக்கும் என்றார்.

இந்நிலையில், குறித்த போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளதாகவும், இதன்போது இலங்கை அணியின் வெற்றிக்காக பங்காற்றிய முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிறுவன முன்னாள் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.