ஐ.சி.சியினால் விதிக்கப்பட்ட தடைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் எதிர்ப்பு

296
Faizer Musthafa

கிரிக்கெட் விளையாட்டின் மகத்துவத்தை சீர்குழைக்கும் வகையில் நடந்துக்கொண்ட இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் அணி முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு ஐ.சி.சியினால் விதிக்கப்பட்ட தண்டனை குறித்து தான் மிகவும் கவலையடைவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

சந்திமால், ஹதுருசிங்க, குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட், 4 ஒரு நாள் போட்டிகளில் தடை

கடந்த மாதம் 14 ஆம் திகதி சென். லூசியாவில் ஆரம்பமான..

அத்துடன், பந்தை சேதப்படுத்தும் குற்றச்சாட்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சட்டதிட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மாதம் 14ஆம் திகதி சென். லூசியாவில் நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்ததாக இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் மீது நடுவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனால், குறித்த போட்டியின் நடுவர்களாக இருந்த அலீம் தார் மற்றும் இயன் கூல்ட் ஆகியோர், ஐந்து மேலதிக ஓட்டங்களை (Penalty Runs) மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கொடுத்ததுடன், மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு முன்னர் வேறு பந்தினை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

எனினும், இந்த தீர்மானத்தை ஏற்க மறுத்த இலங்கை வீரர்கள் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்திற்காக மைதானத்திற்குள் வர மறுத்தனர். அதேவேளை, இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, மற்றும் அணி முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோர் போட்டி மத்தியஸ்தர் ஜவஹல் ஸ்ரீநாத்துடன் இது தொடர்பில் விவாதத்திலும் ஈடுபட்டனர்.

எவ்வாறிருப்பினும் சுமார் இரண்டு மணி நேரத்தின் பின்னர், இலங்கை வீரர்கள் மைதானத்திற்குள் நுழைய போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்த நிலையில், தன்மீதான குறித்த குற்றச்சாட்டை தினேஷ் சந்திமால் மறுத்திருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர், போட்டி மத்தியஸ்தர் ஜவஹல் ஸ்ரீநாத், இலங்கை அணி முகாமைத்துவம், போட்டி நடுவர்களின் முன்னிலையில் விசாரணை இடம்பெற்றது.

குறித்த விசாரணையில், தனது வாயில் ஏதோ ஒரு இனிப்பை போட்டுக் கொண்டதை சந்திமால் ஏற்றுக் கொண்டார். அதனையடுத்து, பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் சந்திமாலுக்கு அதிகபட்ச தண்டனையாக இரண்டு இடைநிறுத்த புள்ளிகளுடன் போட்டி ஊதியத்தின் 100 சதவீதத்தை அபராதமாக விதிக்க போட்டி மத்தியஸ்தர் நடவடிக்கை எடுத்தார்.

இதனால் தினேஷ் சந்திமாலுக்கு மேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலையும் ஏற்பட்டது.

இந்த நிலையில், கிரிக்கெட் விளையாட்டின் மகத்துவத்தை சீர்குழைக்கும் வகையில் நடந்துக்கொண்ட இந்த மூவருக்கும் 2 டெஸ்ட் மற்றும் 4 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கத் தடைப்படும் வகையில் .சி.சியினால் கடந்த சில தினங்களுக்கு முன் புதிய தீர்ப்பொன்று விதிக்கப்பட்டது.

தென்னாபிரிக்க கிரிக்கெட்டுடன் மீண்டும் இணையும் ஏபி டி வில்லியர்ஸ்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற…

இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (18) விசேட அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், கிரிக்கெட் விளையாட்டின் மகத்துவத்தை மீறி செயற்பட்டதாக தினேஷ் சந்திமால் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு .சி.சியினால் குற்றம் சுமத்தப்பட்டது. இதனால், அவர்களுக்கு போட்டித்தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த தண்டனைகளைக் குறைத்துக் கொள்ளவும், எமது வீரர்களும், அதிகாரிகளும் நிரபராதிகள் என்பதை நிரூபிக்கவும் நாங்கள் பல்வேறு வழிகளிலும் .சி.சியிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், நாம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன.

.சி.சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டுள்ள நாடாக, நாம் அதன் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதற்கும், அதனை பின்பற்றுவதற்கும் கடமைப்பட்டுள்ளோம். எனவே தவறுகள் இழைக்கும் பட்சத்தில் அதற்கான தண்டனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பந்தை சேதப்படுத்தும் குற்றச்சாட்டுக்கான சட்டதிட்டத்தில் நிறைய குறைபாடுகள் உள்ளன. அதனை .சி.சி நன்கு ஆராய்ந்து அந்த குறைபாடுகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு இலங்கை அணித் தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டணை குறித்து நாம் கவலைப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<