உலகக் கிண்ணத்தில் விளையாடும் சிரேஷ்ட வீரர்களைக் கொண்ட இலங்கை அணி

646

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 10 அணிகளில் அதிக வயதுகொண்ட சிரேஷ்ட வீரர்களைக் கொண்ட அணியாக இலங்கையும், இளம் வீரர்களைக் கொண்ட அணியாக பாகிஸ்தான் அணியும் விளங்குகின்றன.

சிரேஷ்ட வீரர்களைக் கொண்ட இலங்கை

முன்னாள் உலகக் சம்பியனான இலங்கை அணி, இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிக வயதுடைய வீரர்களைக் கொண்ட அணியாகக் களமிறங்கவுள்ளது. அண்மைக்காலமாக ஒருநாள் போட்டிகளில் தடுமாற்றத்தையும், பின்னடைவையும் சந்தித்து வந்த இலங்கை அணி, உலகக் கிண்ணத்தில் பெரிதும் சிரேஷ் வீரர்களையே நம்பியுள்ளது. இலங்கை அணியில் உள்ள வீரர்களின் வயது 29.9 என்ற சராசரியைக் கொண்டுள்ளது. இதில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க (35 வயது), சுரங்க லக்மால் (32) மற்றும் முன்னாள் அணித் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் (31) அதிக வயதுடைய வீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளனர்.

உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணி இங்கிலாந்து பயணம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கும்….

அதேநேரம் 36 வயதான சகலதுறை வீரரான ஜீவன் மெண்டிஸ் மற்றும் 31 வயதான திமுத் கருணாரத்ன ஆகியோர் 2015 இற்குப் பிறகு மீண்டும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு அடுத்து முறையே தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளில் அதிக வயதுடைய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். தென்னாபிரிக்கா வீரர்களின் வயது 29.5 என்ற சராசரியைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. அதன்பிறகு இங்கிலாந்து அணி 29.4 என்ற சராசரியுடன் உள்ளது.

இதில் தமது கடைசி உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடவுள்ள இம்ரான் தாஹிர் (40 வயது), ஹசிம் அம்லா (36 வயது), டேல் ஸ்டெயின் (35 வயது) மற்றும் ஜே.பி டுமினி (35 வயது) ஆகியோர் தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றுள்ள சிரேஷ் வீரர்களாவர்.

அதேபோல, இங்கிலாந்து அணியில் லியம் பிளென்கட் (34 வயது), ஜோ டென்லி (33 வயது), இயன் மோர்கன் (32 வயது), மொயின் அலி (31 வயது), ஆடில் ரஷீத் (31 வயது) மற்றும் கிறிஸ் வோக்ஸ் (30 வயது) ஆகியோர் அதிக வயதுடைய வீரர்களாக இடம்பிடித்துள்ளனர்.  

எனினும், சிரேஷ்ட மற்றும் இளம் வீரர்களைக் கொண்ட இந்த மூன்று அணிகளும் அண்மையில் நடைபெற்ற தொடர்களில் சிறப்பாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்களைக் கொண்ட பாகிஸ்தான்

இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள அணிகளில் பாகிஸ்தான் குழாத்தில் அதிக இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அந்த அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் வயது சராசரி 27.3 ஆக உள்ளது. இதில் இளம் வேகப் பந்துவீச்சாளர்களான சஹீன் ஷா அப்ரிடி மற்றும் மொஹமட் ஹஸனைன் ஆகிய இருவரும் 20 வயதுடைய வீரர்களாக இடம்பிடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி 27.4 என்ற வயது சராசரியுடன் காணப்படுகின்றது. அந்த அணியில் சுழல் பந்துவீச்சாளர்களான முஜிபுர் ரஹ்மான் (18 வயது), ஷித் கான் (20 வயது) ஆகியோர் இளம் வீரர்களாக இடம்பிடித்துள்ளனர்.


அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள்

இம்முறை உலகக் கிண்ணத்தில் இடம்பெற்றுள்ள அணிகளில் அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களைக் கொண்ட அணியாக இந்தியா உள்ளது. இந்திய அணி இதுவரை 1573 ஒருங்கிணைந்த ஆட்டங்களில் களமிறங்கியுள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தமட்டில் டோனி 341 போட்டிகளிலும், அணித் தலைவர் கோஹ்லி 227 போட்டிகளிலும், உதவித் தலைவர் ரோஹித் சர்மா 206 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். இதில் டோனியின் சராசரி 50.72 ஆக உள்ளது.

அதனைத்தொடர்ந்து பங்களாதேஷ் அணி உள்ளது. அந்த அணியின் தலைவர் ஷ்ரபி மொர்தசா (205), சகிப் அல் ஹசன் (195), முஷ்பிகுர் ரஹீம் (201), தமீம் இக்பால் (189) அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்ட வீரர்களாக இடம்பிடித்துள்ளனர்.

இம்முறை உலகக் கிண்ணம் குறித்து குமார் சங்கக்கார

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர….


அதிக சதங்கள் அடித்தவர்கள்

ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியா அணி ஒட்டுமொத்தமாக 90 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணியின் தலைவர் விராத் கோஹ்லி 41 சதங்களுடன் முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து ரோஹித் சர்மா (22), ஷிகர் தவான் (16), டோனி (10) சதங்கள் என குவித்துள்ளனர்.

மேலும், அதிக சதங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்களைக் கொண்டுள்ள வரிசையில் நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் உள்ளன. இங்கிலாந்து அணியில் 7 வீரர்களும், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இந்தியாவில் தலா 5 வீரர்களும் அதிகமாக ஒருநாள் சதங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் மாத்திரம் 25 சதங்களை தன்வசம் வைத்துள்ளார். இதேநேரம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணியில் உள்ள வீரர்கள் பெரிதளவில் சதம் அடிக்கவில்லை.


அதிக விக்கெட்டுகள்

இம்முறை உலகக் கிண்ணத்தில் பந்துவீச்சு முக்கிய இடத்தை வகிக்கவுள்ளது. பொதுவாக இங்கிலாந்து ஆடுகளங்களில் 300 இற்கும் அதிகமான ஓட்டங்களைக் குவிக்க முடியும் என்பதால் பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்டுகளை கைப்பற்றுவது சற்று கடினமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

டி20 அணிகள், வீரர்களின் தரவரிசைகளில் எதிர்பாராத மாற்றங்கள்

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20….

எனினும், இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களை கொண்ட பட்டியலில் பங்களாதேஷ் (829), இலங்கை (815) முன்னிலையில் உள்ளன.

இதில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க 322 விக்கெட்டுகளுடனும், பங்களாதேஷ் அணியின் ஷ்ரபி மொர்தசா 259 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அதேநேரம், அவுஸ்திரேலிய அணிதான் குறைந்தளவு (495 விக்கெட்டுகள்) அதிக விக்கெட்டுகளை கொண்டுள்ளது. எனினும், அந்த அணியின் மிட்செல் ஸ்டார்க் மாத்திரம் 145 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<