செலஞ்சர் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை இளையோர் அணி

650

நிபுன் தனஞ்சய மற்றும் நுவன் பெர்னாண்டோவின் அபார இணைப்பாட்டத்தின் மூலம் இந்திய புளூ  அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்திய இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி இந்தியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட செலஞ்சர் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதன்போது 204 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு நிபுன் தனஞ்சய மற்றும் நுவன் பெர்னாண்டோ ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 156 ஓட்ட இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்டனர்.

இந்தியாவில் முதல் வெற்றியை சுவைத்த இலங்கை இளம் அணி

இந்தியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான செலஞ்சர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய ரெட் அணியை வீழ்த்தி இலங்கை …

தமது நாட்டின் கனிஷ்ட வீரர்களுக்காக இந்திய கிரிக்கெட் சபை நடாத்தும் இந்த ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை கனிஷ்ட அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இலங்கை இளையோர் அணி இந்திய கிரீன், புளூ  மற்றும் ரெட் அணிகளுடன் லீக் போட்டிகளில் ஆடியது.

முதலிரு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்ற நிலையிலேயே இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் அணி இன்று (30) இந்திய புளூ  அணியை கடைசி லீக் போட்டியில் எதிர்கொண்டது. இலங்கை அணி இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாக இருந்தது.

மும்பையில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் அயன சிறிவர்தன முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். இந்நிலையில் முதலில் துப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய புளூ  அணியின் முதல் இரு விக்கெட்டுகளையும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஹேஷான் ஹெட்டியாரச்சி வீழ்த்தினார். இதனால் இந்திய புளூ  அணி 22 ஓட்டங்களுக்கே முதலிரு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

எனினும் மனோஜ் கல்ரா மற்றும் ஓம் போசலே 3ஆவது விக்கெட்டுக்கு 65 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்று அணியை சரிவில் இருந்து மீட்க முயன்றனர். எனினும் ஆரம்ப வீரர் கல்ரா 33 ஓட்டங்களுடனும், போசலே 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இந்திய புளூ அணி மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டது.

இந்திய புளூ அணி 120 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது ஜோடி சேர்ந்த எம்.எஸ். பண்டஜ் மற்றும் ஷிவம் மாவி 77 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டதால் அந்த அணியால் 200 ஓட்டங்களை நெருங்க முடிந்தது. அதிரடியாக ஆடிய மாவி 31 பந்துகளில் 41 ஓட்டங்களை விளாசியதோடு எம்.எஸ். பண்டஜ் 30 ஓட்டங்களை பெற்றார்.

எனினும் இந்திய புளூ அணி 46.3 ஓவர்களில் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

ஹேரத்திற்கு பதிலாக புதிய சுழற்பந்து வீச்சாளரை களமிறக்கும் இலங்கை

இலங்கை அணியின் தற்போதைய பிரதான சுழற்பந்து வீச்சாளராக உள்ள சிரேஷ்ட வீரர் ரங்கன ஹேரத்…

இதன்போது இலங்கை இளையோர் அணி சார்பில் எட்டு வீரர்கள் பந்து வீசினர். எனினும் ஹேஷான் ஹெட்டியாரச்சி 26 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியதோடு, ஹரீன் புத்தில 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் ஓரளவு இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. ஆரம்ப வீரர் சன்தூஷ் குணதிலக்க 8 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தனஞ்சய லக்ஷான் 4 ஓட்டங்களோடு ரன் அவுட் முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

மறுமுனையில் ஆடிய ஆரம்ப வீரர் விஷ்வ சதுரங்க பந்துகளை அடித்தாடி ஓட்டங்களை பெற்றுவந்தபோது ஷிவம் மாவியின் பந்துக்கு ஆட்டமிழந்தார். 28 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 5 பௌண்டரிகளுடன் 27 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் இலங்கை அணி 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த நிபுன் தனஞ்சய மற்றும் நுவன் பெர்னாண்டோ ஆகியோர் இந்திய புளூ அணியின் எதிர்பார்ப்பை சிதறிடித்தனர். இருமுனைகளிலும் இந்திய கனிஷ்ட பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்த இந்த வீரர்கள் இலங்கை அணியின் ஓட்டங்களை 199 வரை உயர்த்தினர்.

எனினும் புனித செபஸ்டியன் கல்லூரியின் வலது கை துடுப்பாட்ட வீரர் நுவன் பெர்னாண்டோ வெறும் 9 ஓட்டங்களால் தனது சதத்தை தவறவிட்டார். 111 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 11 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 91 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

இலங்கையுடனான ஒரு நாள் தொடரில் கோஹ்லி இல்லை : அணிக்கு புதிய தலைவர்

இலங்கை அணியுடன் நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஓருநாள் தொடரில் இந்திய  ….

மறுமுனையில் ஆடிய புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் நிபுன் தனஞ்சய இலங்கை அணியின் வெற்றிவரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார். 99 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 5 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களை பெற்றார்.

இதன்படி இலங்கை இளையோர் அணி 44.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 204 ஓட்டங்களை எட்டியது.

இதேவேளை இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதை தீர்மானிக்கும் தீர்க்கமான லீக் போட்டி ஒன்றும் இன்று நடைபெற்றது. இந்திய ரெட் மற்றும் கிரீன் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் கிரீன் அணி வென்றால் இலங்கையின் இறுதிப் போட்டி வாய்ப்பு பறிபோகும் நிலை இருந்தது.

எனினும் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ரெட் அணி 273 ஓட்டங்களை பெற்றது. பதிலெடுத்தாடிய கிரீன் அணி 186 ஓட்டங்களுக்கே சுருண்டு தோல்வியை சந்தித்து.

இதன்படி செலஞ்சர் கிண்ண லீக் போட்டிகளின் புள்ளிப்பட்டியலில் இந்திய புளூ அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்த இரு அணிகளும் மோதும் இறுதிப் போட்டி வரும் சனிக்கிழமை (02) மும்பையில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்திய புளூ – 203 (46.3) – ஓம் போசலே 49, ஷிவம் மாவி 44, மன்ஜோத் கல்ரா 33, எம்.எஸ் பண்டஜ் 30, ஹேஷான் ஹெட்டியாரச்சி 2/26, ஹரீன் புத்தில 2/43

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி – 204/4 (44.2) – நுவனிது பெர்னாண்டோ 91, நிபுன் தனன்ஜய 65*, விஷ்வ சதுரங்க 27, ஷிவம் மாவி 2/40

 

முடிவு இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி

ThePapare Tamil weekly sports roundup – Episode 04

இலங்கை கிரிக்கெட் அணியின் மோசமான வரலாற்றுத் தோல்வி, கால்பந்து நடுவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் சர்வதேச அளவில் இடம்பெற்ற மிகப் பெரிய விருது வழங்கும்