உலக மெய்வல்லுனர் தொடருக்கு இலங்கையிலிருந்து 4 பேர் பங்கேற்பு

169
Sri Lanka at lAAF World Championships

லண்டனில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கு இலங்கையிலிருந்து 4 வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளதாக மெய்வல்லுனர் சங்கம் தெரிவித்துள்ளது.

200 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ள லண்டன் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் ஏற்பாட்டுக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள அடைவு மட்டத்தின்படி மரதன் போட்டிகளுக்காக அநுராத இன்திரஜித் குரே மற்றும் ஹிருனி விஜேரத்ன ஆகியோர் ஏற்கனவே நேரடியாகத் தகுதிபெற்றுக்கொண்டனர்.

பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள்

பஹாமாஸ், நசௌவ்வில் நிறைவுக்கு வந்த 6ஆவது பொதுநலவாய இளையோர்..

அத்துடன் இந்தியாவின் புவனேஸ்வரில் இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற 22ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கைக்காக ஒரேயொரு தங்கப் பதக்கத்தினை வென்று கொடுத்த நிமாலி லியனாரச்சி(800 மீற்றர்) உலக மெய்வல்லுனர் போட்டிகளுக்கான அடைவுமட்டத்தை பூர்த்தி செய்யாத போதிலும், ஆசியாவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதால் குறித்த போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, ஈட்டி எறிதல் வீரர் வருண லக்ஷான் தயாரத்ன குறித்த போட்டிக்கான தரப்படுத்தலில் 29ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதால் பெரும்பாலும் அவருக்கும் இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பொதுவாக உலக மெய்வல்லுனர் போட்டிகளுக்கான உலக தரப்படுத்தலில் முதல் 32 இடங்களில் உள்ள வீரர்களுக்கு முதல் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டும். அதன்படி வருண லக்ஷான் இதில் பங்கேற்பது தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. குறித்த அறிவிப்பிக்கு அமைய இலங்கையின் நான்காவது வீரராக அவரும் லண்டன் பயணமாகவுள்ளார்.

இம்முறை உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கும் வாய்ப்பை மரதன் ஓட்ட வீரர் அநுராத இந்திரஜித் குரே முதலாவதாகப் பெற்றுக்கொண்டார். அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற அவர்,  2 மணித்தியாலமும் 15.38 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், உலக மெய்வல்லுனர் போட்டிகளுக்கான அடைவு மட்டத்தைப் பூர்த்தி செய்திருந்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் எதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் முதல் 2012 ஆம் அண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் வரை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த அனுராதா இந்திரஜித் குரே, மூன்றாவது முறையாக றியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று தேசத்திற்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தி கண்டு வரும் இலங்கை மெய்வல்லுனர் வீரர்களுக்கு மேலும் பல வாய்ப்பு

இந்தியாவின் புவனேஸ்வரில் நடைபெற்று முடிந்த 22ஆவது ஆசிய தடகள சம்பியன்ஷிப்…

இந்நிலையில், உலக மெய்வல்லுனர் போட்டிகளுக்கு அமெரிக்காவில் வசிக்கின்ற இலங்கை வீராங்கனையான ஹிருனி விஜேரத்ன தகுதிபெற்றிருந்தார். அமெரிக்காவில் கடந்த மே மாதம் நடைபெற்ற இயுஜினி திறந்த மரதன் போட்டியில் பங்குபற்றிய அவர், போட்டித்தூரத்தை 2 மணித்தியாலயங்களும், 43.31 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இதன்படி, இம்முறை உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியின் அடைவுமட்டத்தைவிட அதிகளவு நேரத்தைப் பதிவு செய்த ஹிருனி, இப்போட்டித் தொடருக்கு தகுதிபெற்ற முதல் இலங்கை வீராங்கனையாக பதிவானார்.

15 மற்றும் 10 கிலோமீற்றர் தூரங்களைக் கொண்ட அரை மரதன் போட்டிப் பிரிவில் இலங்கைக்கான சாதனையை தன்னகத்தே கொண்டுள்ள ஹிருனி, கடந்த வருடம் நடைபெற்ற றியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார். இதன்படி, உலக மெய்வல்லுனர் சம்மேளனத்தின் அனுமதியுடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கையை முதற்தடவையாக அவர் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை சார்பாக மரதன் ஓட்ட வீரர்களான அநுராத இன்திரஜித் மற்றும் கீதானி ராஜசேகர ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றிய இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க, பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.