இராணுவத்தின் பங்களிப்புடன் ஹொரனையில் புதிய கிரிக்கெட் மைதானம்

339
Images Courtesy - Sri Lanka army media

இலங்கை இராணுவ தளபாட படைப்பிரிவின் (Sri Lanka Army Ordnance Corps – SLAOC) மேற்பார்வையின் கீழ் களுத்துறை மாவட்டம், ஹொரனை தொம்பேகொட பகுதியில் அமைந்துள்ள இராணுவ தளபாட படைப்பிரிவின் தலைமையகத்தில், அனைத்து வசதிகளையும் கொண்ட கிரிக்கெட் மைதானம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானம் நேற்று (10) இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இனி நாணய சுழற்சி இல்லை; அறிமுகமாகிறது துடுப்பாட்ட மட்டை சுழற்சி

அவுஸ்திரேலியாவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள……

இதனையடுத்து இவ்வருடத்துக்கான இலங்கை இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான டி-20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியும் அங்கு நடைபெற்றது. இதில் இராணுவ பீரங்கிப் படைப் பிரிவும், தளபாட படைப் பிரிவும் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 15 ஓட்டங்களால் இராணுவ பீரங்கிப் படைப்பிரிவு வெற்றியீட்டியது.

10 ஏக்கர் நிலப் பரப்பில் நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தின் விளையாட்டுத் தொகுதி மற்றும் பார்வையாளர் அரங்குகள் என்பன மூன்று கட்டங்களாக பூர்த்தி செய்யப்படவுள்ளன.

இதன் முதல் கட்டமாக கிரிக்கெட் மைதானம் மற்றும் பிரதான விளையாட்டரங்கு ஆகியன முழுமையாக நிர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதில் நிர்மானிக்கப்பட்டுள்ள பார்வையாளர் அரங்கில் சுமார் 1000 ஆயிரம் பேருக்கு போட்டிகளை பார்க்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த கட்டிடத்தின் அமைப்பு மற்றும் கட்டமைப்பு ஆகியன அநுராதபுர யுகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

மழை நீர் வலிந்து செல்கின்ற விசேட வடிகால் அமைப்புக்களைக் கொண்டதாக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த மைதானமானது எட்டு ஆடுகளங்களைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாவது கட்டத்தில் இரு அணி வீரர்களும் தங்குவதற்கான 2 விடுதிகளும், போசனசாலை ஒன்றும், வீரர்கள் பயிற்சிகளைப் பெறுவதற்கான நான்கு மாதிரி ஆடுகளங்களும் நிர்மானிக்கப்படவுள்ளன.

இதனையடுத்து மூன்றாவது கட்டத்தில் 15 அறைகளைக் கொண்ட தங்குமிட வசதிகளையும், நீச்சல் தடாகமொன்றும் நிர்மானிக்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த அனைத்து நிர்மானப் பணிகளும் நிறைவடைய சுமார் 3 வருடங்கள் செல்லும் என இராணுவ தளபாட படைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, ஹொரனையில் அமைந்துள்ள இரணுவ தளபாட படைப் பிரிவு தலைமையக வளாகத்தில் உள்ள ரம்மியமான, இயற்கை அழகு நிறைந்த பகுதியில் நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் களுத்துறை மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் கழகங்கள், பாடசாலைகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற முதல்தர மற்றும் தேசிய மட்ட கிரிக்கெட் தொடர்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் முன்நின்று செயற்பட்ட இராணுவ தளபாட படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மற்றும் இலங்கை இராணுவ கிரிக்கெட் அணியின் பொறுப்பதிகாரியுமான மேஜர் ஜெனரல் பிமல் விதானகே தெரிவித்தார்.

Photos : Sri Lanka vs India – ACC Emerging Asia Cup 2018

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”இந்தப் பகுதியிலேயே கிரிக்கெட் விளையாடுவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரேயொரு மைதானமாக மக்கொன சர்ரே கிரிக்கெட் மைதானம் காணப்படுகின்றது. அதன் காரணமாக இலங்கை இராணுவத்தினால் சகல வசதிகளையும் கொண்ட கிரிக்கெட் மைதானமொன்றை நிர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வருடந்தோறும் எமது படைப்பிரிவினால் ஏற்பாடு செய்கின்ற களியாட்ட நிகழ்வுகளின் மூலம் பெற்றுக்கொண்ட பணத்தைக் கொண்டுதான் இதற்கான நிதியைத் திரட்டினோம்.

இப்போதைக்கு 50 மில்லியன் ரூபா பணத்தை இதற்காக நாம் செலவழித்துள்ளோம். உண்மையில் குறைந்த பணத்துடன் இவ்வாறான மைதானமொன்றை நிர்மானிப்பதென்பது மிகப் பெரிய சவாலாகும். அதுமாத்திரமின்றி, இதன் நிர்மானப் பணிகளுக்காக இராணுவ வீரர்களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொண்டோம். அதேபோல இந்த மைதானத்தை நிர்மானிக்க ஒத்துழைப்பும், உதவியும் வழங்கிய இராணுவத் தளபதிக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்என்றார்.

மேலும், இலங்கை அணிக்காக விளையாடி வருகின்ற சீக்குகே பிரசன்ன, எமது படைப் பிரிவைச் சேர்ந்தவராவார். மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து இராணுவத்துக்கு வந்து இன்று முழு உலகிலும் பேசப்படுகின்ற வீரராக மாறியுள்ளார். எனவே, எதிர்வரும் காலங்களில் இலங்கை அணிக்கு நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிக் கொடுப்பதற்காக இளம் வீரர்களுக்கு தங்குமிட வசதியுடன் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<