மழை குறுக்கிட்ட போட்டியில் இலங்கை A அணிக்கு நெருக்கடி

291
@CWI media

இலங்கை A மற்றும் மேற்கிந்திய தீவுகள் A அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற நான்கு நாள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் நேற்று (12) இரண்டாவது நாள் ஆட்டத்தில் பெரும்பாலான நேரம் மழை குறுக்கிட்டது.

எனினும் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி சுனில் அம்ப்ரிஸின் சதத்தின் மூலம் 364 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

விக்கெட் வீழ்த்த தடுமாறும் இலங்கை A அணி

மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற நான்கு…

ஜமைக்காவின் டி ரலவ்னி அரங்கில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது 76.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்றிருந்தது. விஷோல் சிங் (58) மற்றும் அம்ப்ரிஸ் (62) அரைச் சதங்களுடன் களத்தில் இருந்தனர்.

எனினும் சீரற்ற காலநிலையால் முதல் நாள் ஆட்டமும் தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டதோடு முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இலங்கை நேரப்படி நேற்று இரவு ஆரம்பமான இரண்டாவது நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டது.

இரண்டாவது நாளிலும் சிங் தனது நிதான ஆட்டத்தை தொடர்ந்தார். மறுபுறம் அம்ப்ரிஸ் வேகமாக ஓட்டங்களை குவிக்க மேற்கிந்திய தீவுகள் A அணியால் இலங்கைக்கு மேலும் நெருக்கடி கொடுக்க முடிந்தது.

எனினும் இரண்டாவது நாளில் மேலும் 23 ஓட்டங்களை குவித்திருந்தபோது சிங், அசித் பெர்னாண்டோவின் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார். ஐந்து மணி நேரம் ஆடுகளத்தில் இருந்த சிங் 219 பந்துகளுக்கு முகம்கொடுத்து 4 பௌண்டரிகளுடன் 81 ஓட்டங்களைப் பெற்றார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் 28 வயதான சிங் அந்த போட்டிகளில் சோபிக்க தவறியிருந்த நிலையில் அவரது இந்த இன்னிங்ஸ் தேர்வாளர்களை தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

இதன்போது சிங் ஐந்தாவது விக்கெட்டுக்காக அம்ப்ரிசுடன் ஜோடி சேர்ந்து 136 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டார்.

இலங்கையின் வெற்றி வேட்கை ஒரு நாள் போட்டிகளிலும் தொடருமா?

ஆசியாவின் கிரிக்கெட் சகோதரர்களாகக் கருதப்படும் இலங்கை மற்றும் பாகிஸ்தான்…

அம்ப்ரிஸ் இரண்டாவது நாளிலும் சற்று வேகமாக ஓட்டங்களை குவித்ததோடு A நிலை போட்டிகளில் முதல் சதத்தை பெற்றார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரை ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் அம்ப்ரிஸ் எந்தவித நெருக்கடியும் இன்றி இலங்கைத் தரப்பின் பந்துகளை பௌண்டரிகளுக்கு செலுத்தினார். 136 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 12 பௌண்டரிகளுடன் 106 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் மித வேகப்பந்து விச்சாளரான சாமிக்க கருணாரத்ன வீசிய பந்தில் பெர்னாண்டோவிடம் பிடிகொடுத்து அவர் ஆட்டமிழந்தார்.

அம்ப்ரிசுடன் 6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 51 ஓட்டங்களை பகிர்ந்துகொண்ட ரஹ்கீம் கோன்வோலின் விக்கெட்டையும் கருணாரத்ன பதம்பார்த்தார். 64 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 5 பௌண்டரிகளுடன் 36 ஓட்டங்களை பெற்றார்.

தொடர்ந்து வந்த ஜமியோன் ஜகப்ஸையும் குறைந்த ஓட்டங்களுடன் வீழ்த்துவதற்கு இலங்கை அணியால் முடிந்தது. முதல் நாளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல்தர கிரிக்கெட்டில் அதிக அனுபவம் கொண்ட சுழற்பந்து வீச்சாளர் மலின்த புஷ்பகுமாரவின் பந்துக்கு விக்கெட் காப்பாளர் சதுன் வீரக்கொடி ஸ்டம்ப் செய்து ஜகப்ஸை அரங்கை நோக்கி திருப்பி அனுப்பினார். 45 பந்துகளுக்கு முகம்கொடுத்த ஜகப்ஸ் ஒரு பௌண்டரியுடன் 15 ஓட்டங்களையே பெற்றார்.

இந்த போட்டியில் இலங்கை A அணி விக்கெட் காப்பாளர் வீரக்கொடியின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. முதல் நாளில் அவர் இரண்டு ஸ்டம்புகளை செய்ததோடு மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவர் ஷமர் பிரூக்ஸை ரன் அவுட் செய்தார். 24 வயதான வீரக்கொடி இந்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கை அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

முல்தான் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள சங்கா, பொல்லார்ட், மலிக்

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படவுள்ள.

அதேபோன்று மலின்த புஷ்பகுமார வழமைபோல் இந்த டெஸ்டிலும் தனது மரத்தன் ஓவர்களை வீசினார். 36 ஓவர்கள் வீசிய அவர் 104 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதேபோன்று, கருணாரத்ன 21 ஓவர்கள் பந்துவீசி 61 ஓட்டங்களுடன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெர்னாண்டோ மற்றும் ஷெஹான் ஜயசூரியவால் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்த முடிந்தது. முதல் இன்னிங்ஸில் தனன்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை A அணி எட்டு பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நாள் அட்டத்தின் பரபரப்பான மாலை நேரத்தில் மழையே ஆதிக்கம் செலுத்தியது. இதனால் இரண்டாவது நாள் போட்டி 44 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

மழை காரணமாக இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தப்படும்போது மேற்கிந்திய தீவுகள் A அணி 120 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 364 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஷெல்டன் கொட்ரெல் 2 ஓட்டங்களுடனும் கெயோன் ஜோசப் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

நான்கு நாள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் A அணி: 364/8 (120) – அம்ப்ரிஸ் 106 (136), விஷோல் சிங் 81 (219), மலின்த புஷ்பகுமார 104/3

>> மேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் படிக்க <<