பாகிஸ்தான் வீரருக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்ட முரளி விஜய்

119
© espncricinfo

இந்திய அணியின் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்டு வந்த முரளி விஜய், இங்கிலாந்தின் கௌண்டி (உள்ளூர்) கிரிக்கெட் அணியான சமர்செட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

எம்மால் இன்னும் வெற்றிபெற முடியுமென நம்புகிறோம் -டொம் லேதம்

இவர், பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் அசார் அலிக்கு பதிலாக சமர்செட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வீரர் என்ற அடிப்படையில் சமர்செட் அணிக்காக இணைக்கப்பட்டுள்ள முரளி விஜய், அந்த அணிக்காக 3 போட்டிகளில் விளையாடவுள்ளார்.

சமர்செட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் முரளி விஜய் குறிப்பிடுகையில், “சமர்செட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த  அணி கௌண்டி சம்பியன்ஷிப்பில் முன்னேற்றம் அடைவதற்கான எனது பங்களிப்பை வழங்குவேன். அதுமாத்திரமின்றி, சமர்செட் அணியென்பது, மிகவும் நன்மதிப்புள்ள கழகம். அந்த அணிக்காக விளையாடுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார். 

முரளி விஜய் இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் விளையாடியிருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் அதிகம் பேசப்பட்டிருக்கிறார். இந்திய அணிக்காக 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 38.28 ஓட்டங்கள் என்ற ஓட்ட சராசரியில், 3,982 ஓட்டங்களை குவித்துள்ளார். எனினும், தற்போது இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் இவர், அதிகமாக போட்டிகளில் விளையாடுவதில்லை.

இலங்கை அணிக்கு ஏமாற்றத்தை வழங்கிய நியூசிலாந்தின் துடுப்பாட்டம்

எனினும், கடந்த வருடம் கௌண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக விளையாடிய இவர், 64.60 என்ற சராசரியில் 320 ஓட்டங்களை குவித்தார். 

இதேவேளை, முரளி விஜய் அணியில் இணைக்கப்பட்டமை தொடர்பில், சமர்செட் அணியின் பணிப்பார் எண்டி ஹெரி குறிப்பிடுகையில், “எமது அணியில் முரளி விஜய் போன்ற மிகச்சிறந்த வீரர் ஒருவரை இணைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. முரளி விஜய் கடந்த வருடம் கௌண்டி சம்பியன்ஷிப்பில் சசெக்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். அவருக்கு இங்கிலாந்து ஆடுகளங்களில் ஆடிய அனுபவம் உள்ளது. அதனால், அசார் அலிக்கு பதிலாக சிறந்த மாற்றமாக அவர் இருப்பார்” என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<