ஜனாதிபதி கிண்ண பாடசாலைகள் கால்பந்து போட்டி இம்மாதம் ஆரம்பம்

736
Photos: President's Cup - Inter School Invitational Football Tournament

கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியின் பழைய மாணவர்களான 80கள் குழு ஏற்பாடு செய்யும் பாடசாலைகளுக்கு இடையிலான ஜனாதிபதிக் கிண்ண அழைப்பு கால்பந்து தொடர் கொழும்பு ரேஸ்கோஸ் மைதானத்தில் பெப்ரவரி 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன் மாபெரும் இறுதிப் போட்டி மார்ச் 11ஆம் திகதி நடைபெறும்.

இலங்கை தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக பக்கீர் அலி

இலங்கை அணியின் முன்னாள் வீரர் நிசாம் பக்கீர் அலியை…

பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கால்பந்து விளையாட்டை வளர்ப்பது, பங்கேற்பாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது மற்றும் இலங்கை பாடசாலை கால்பந்து சம்மேளனம் மற்றும் தேசிய அணிக்கு திறமைகளை அடையாளம் காண உதவுவது ஆகியவை இந்த போட்டித் தொடர் நடாத்தப்படுவதற்கான பிரதான நோக்கங்களாகும்.

இந்தப் போட்டித் தொடர் நடாத்தப்படுவதை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று (15) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கை கால்பந்து சம்மேளனத் தலைவர் அனுர டி சில்வாவும் பிரமுகர்களில் ஒருவராக பங்கேற்றிருந்தார். இதன்போது, இந்த போட்டித் தொடரை நடத்தி பாடசாலை வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.  

2018 ஆம் ஆண்டு இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு பணிமிக்க ஆண்டாக இருக்கப்போவதாக குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டு தேசிய மட்ட அணிகளுக்கான இரண்டு குழாம்கள், அதேபோன்று இளையோர் தேசிய அணி மற்றும் பெண்களின் தேசிய குழாம் ஆகியவற்றுக்கான திட்டங்களை செயற்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், போட்டியில் பங்கேற்கவிருக்கும் பாடசாலை அணிகளின் தலைவர்களுக்கு ஒருசில வார்த்தைகள் கூறவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணித்தலைவர் அஜ்மல், மூன்றாம் பிரிவு பாடசாலை ஒன்றுக்குக் கூட சந்தர்ப்பம் வழங்குவது பற்றி சிலாகித்து பேசினார். இது போன்ற போட்டிகளால் தமக்கு மிக அதிக அளவு திறமையை வெளிப்படுத்த முடியுமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

புனித பத்திரிசியாரை வீழ்த்தி இரண்டாவது முறையாக சம்பியனாகிய புனித ஜோசப்

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால்…

நடப்புச் சம்பியன் ஹமீட் அல் ஹுஸைனி உள்ளடங்களாக 20 பாடசாலைகள் இம்முறை போட்டிகளில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. பங்கேற்கும் அணிகள் விபரம் வருமாறு.  

ஆனந்த கல்லூரி கொழும்பு, டி மெசனோட் கல்லூரி – கதானை, இந்துக் கல்லூரி கொழும்பு, புனித பெனடிக்ட் கல்லூரி – கொழும்பு, அல் முபாரக் மத்திய கல்லூரிமல்வானை, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – நீர்கொழும்பு, ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி – கொழும்பு, லும்பினி கல்லூரி – கொழும்பு, தர்ஸ்டன் கல்லூரி – கொழும்பு, இசிபத கல்லூரி – கொழும்பு, ஸாஹிரா கல்லூரி – கம்பளை, நாலந்த கல்லூரி – கொழும்பு, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி – களுத்துறை, ஸாஹிரா கல்லூரி – கொழும்பு, புனித பேதுரு கல்லூரி – கொழும்பு, டி.எஸ். சேனநாயக்க கல்லூரி – கொழும்பு, கேட்வே சர்வதேச பாடசாலை – கொழும்பு, பதுரியா மத்திய கல்லூரிமாவனல்லை, டீ.பி. ஜாயா ஸாஹிரா கல்லூரி – கொழும்பு, வெஸ்லி கல்லூரிகொழும்பு.  

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி, கல்கிஸை புனித தோமியர் கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி திருகோணமலை மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரி ஆகிய அணிகளும் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டபோதும் இந்த அணிகள் தமது பங்கேற்பை இன்னும் உறுதி செய்யவில்லை.

வழங்கப்படும் விருதுகள்:

சிறந்த வீரர் (போட்டியின் சிறந்த வீரர்)
தொடரின் சிறந்த கோல் காப்பாளர் (தங்க கையுறை)
தொடரில் அதிக கோல் போட்ட வீரர் (தங்க பாதணி)
தொடரின் சிறந்த வீரர்
சிறந்த போட்டி உணர்வை வெளிப்படுத்தியதற்கான விருது