லசித் மாலிங்க ஒரு தனித்துவமான பந்துவீச்சாளர் – இயன் மோர்கன்

1476

சனிக்கிழமை (13) தம்புள்ளையில் நடைபெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையினால் தடைப்பட்டதனை அடுத்து, அப் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறையில் 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்து கொண்டது.

இலங்கை அணியின் தோல்வியால் ஏமாற்றத்துக்கு உள்ளாகிய மாலிங்க

இங்கிலாந்து அணிக்கு …

குறித்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த போதிலும், இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான லசித் மாலிங்க 44 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி திறமையினை வெளிக்கொண்டு வந்திருந்தார்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை அணிக்கு திரும்பியிருக்கும் மாலிங்க, உலகின் முதல்நிலை அணிகளில் ஒன்றுக்கு எதிராக இப்படியான சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியது அனைவரினது பாராட்டுக்களையும் பெறக் காரணமாக மாறியது..

அந்தவகையில் மாலிங்கவின் பந்துவீச்சினை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான இயன் மோர்கனும் பாராட்ட தவறியிருக்கவில்லை. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியை அடுத்து இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் பேசிய மோர்கன்,  

“ துடுப்பாட்டத்தின் போது எங்களது சிறந்த ஆட்டத்தினை அவர் (மாலிங்க) திருடி விட்டார். நாங்கள் ஒரு கட்டத்தில் 300 ஓட்டங்களை கடக்கும் அளவிற்கு மிகவும் வலிமையாக இருந்தோம். ஆனால், (மாலிங்கவின் அபார பந்துவீச்சினால்) சரியான முகாமைகளுடன் அதனை எங்களுக்கு செய்ய முடியாது போய்விட்டது.”  

எனக் கூறிய மோர்கன் மேலும் பேசும் போது,

“அவர் பல்வேறு நுணுக்கங்களை பயன்படுத்தி மிகவும் அழகாக பந்துவீசியிருந்தார். இதனால், ஆரம்பத்தில் வந்த எங்களது சில துடுப்பாட்ட வீரர்களுக்கு அதனை சரியாக எதிர்கொள்ள சில சிக்கல்கள் இருந்தன. அவர் ஒரு தனித்துவமான பந்துவீச்சாளர் “ என்றார்.

மாலிங்கவின் அபார பந்துவீச்சு வீண்: துடுப்பாட்டத்தின் தவறுகளால் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

இலங்கை – இங்கிலாந்து …

தம்புள்ளை போட்டியில் 92 ஓட்டங்களை விளாசிய இங்கிலாந்து அணியின் தலைவர் மோர்கன் மாலிங்கவின் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், மோர்கன் பெற்றுக் கொடுத்த ஓட்டங்கள் அவரை போட்டியின் ஆட்ட நாயகனாக மாற்ற காரணமாக அமைந்துவிட்டது.

இலங்கை அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தனது துடுப்பாட்டம் பற்றி ஊடகவியாலளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மோர்கன், நான் எனது துடுப்பாட்டத்தை மோசமாகவே ஆரம்பித்திருந்தேன். நான் ஜோ ரூட்டுடன் இணைந்து ஆடிய நிமிடங்களும் நன்றாக அமையவில்லை. இதேநேரம், நான் துடுப்பாட்டத்தை சிறப்பாக தொடங்கும் ஒருவனும் இல்லை. எனினும் நேரம், கடக்க கடக்க எனது திட்டத்திற்கு அமைவாக முன்னேறினேன். இதனால், ஓட்டங்கள் பெறுவது பின்னர் இலகுவாக மாறியது. “ என்றார்.

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை கருத்திற் கொண்டு ஒரு நிரந்தர அணியை கட்டமைத்து வரும் இலங்கை, தமது பிரதான சுழல் வீரர்களாக அகில தனன்ய மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோரின் சேவைகளை நம்பியிருக்கின்றது.  

இதன்படி இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தனன்ய – சந்தகன் சுழல் ஜோடி இங்கிலாந்து வீரர்களுக்கு சவால் தந்தர்களா? என கேள்வி ஒன்று இயன் மோர்கனிடம் வினவப்பட்டது.

அதற்கு பதில் தந்த அவர், “இப்படியான (மைதான) நிலைமைகள் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக  இருக்கும். இதனால், அவர்கள் ஆபத்தானவர்களே. அதோடு சுழல் வீரர்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு (பந்து எங்கே எப்போது வரும் என) கேள்வி ஒன்றை எழுப்பி சவால் தரக்கூடியவர்கள். இதே மாதிரியாகவே அவர்களும் (இலங்கையின் சுழல் ஜோடியும்) செய்தனர். எனினும், நானும் ஜோ ரூட்டும் இணைந்து அதனை சரியாக முகாமை செய்திருந்தோம். “ எனக் கூறினார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க