பெண்களை விமர்சித்த விவகாரம்: ஹர்திக், ராகுலுக்கு அபராதம்

88

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த இந்திய வீரர்களான லோகேஷ் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு தலா 20 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணத்தை காஷ்மீர் எல்லையில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் போது உயிரிழந்த வீரர்களின் மனைவிகளுக்கும், பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் மேம்பாட்டுக்கும் நிதியாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கவுண்டி அணியில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான…..

கடந்த ஜனவரி 6 ஆம் திகதி தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் இருவரும், பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது. அவர்கள் இருவரும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதப்பொருளானது. இருவரின் பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இருவருக்கும் BCCI உடனே மனு அனுப்பியது. இருவரும் அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு விளக்கம் அனுப்பியதுடன் மன்னிப்பும் கேட்டனர்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஹர்திக் பாண்டியாவின் ஜிம்கானா கழக உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது, தனியார் நிறுவனம் ஒன்று விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது.

எனினும், அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்த இருவரும் தொடரில் இருந்து விலகி உடனடியாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது. இவர்களுக்குப் பதிலாக  மயாங்க் அகர்வால், விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டனர்.

அத்துடன், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விராட் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டதால், மாற்று வீரர்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக், ராகுல் மீதான தடையை விலக்கிக் கொள்வதாக  BCCI அறிவித்தது. அதன் பிறகு இந்திய அணியில் இடம்பெற்ற இருவரும், உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் டி.கே.ஜெயின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். எனவே, பெண்களை விமர்சித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய டி.கே.ஜெயின், தனது முடிவை அறிவித்துள்ளார். அதை BCCI தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

”இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் இருவர் மீதும் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஏற்கனவே இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டு தண்டனையை அனுபவித்துவிட்டனர், குறைதீர்ப்பு மையத்திடமும் இருவரும் தங்களின் தவறை உணர்ந்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிவிட்டனர்.

இருவரும் தற்போது உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்கள். இருவரின் நலனைக் கருத்தில் கொண்டு இருவருக்கும் தலா ரூ.20 இலட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

2015 உலகக் கிண்ண ஞாபகத்தை மீட்டெடுக்கும் சங்காவின் துடுப்பாட்ட சாதனை

குமார் சங்கக்கார, இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மறுக்கப்படாததும்…….

இதில் 20 இலட்சம் ரூபா பணத்தை காஷ்மீர் எல்லையில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் போது உயிரிழந்த 10 பாதுகாப்பு படை வீரர்களின் மனைவிமார்களுக்கு வழங்க வேண்டும். மீதி 20 இலட்சத்தை  பார்வையற்றோர் கிரிக்கெட் வளர்ச்சிக்காக வழங்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களின் ஊதியத்தில் இருந்து BCCI பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் தொகையை இருவரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் (19.04.2019) இருந்து 4 வார காலத்துக்குள் அளிக்க வேண்டும். தங்களின் செயலுக்கு இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருப்பதால் அவர்கள் மேல் வேறு எதுவும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.”

மேலும், கிரிக்கெட் வீரர்கள் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும். அவர்களுக்கு கிடைத்துள்ள அந்தஸ்துக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும்  என்றும் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<