இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரிலிருந்து பாபர் அசாம் விலகல்

167

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பாபர் அஸாம் இடது கையில் ஏற்பட்ட முறிவு காரணமாக விலகியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கடந்த 24ஆம் திகதி ஆரம்பமாகியது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 184 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

டி வில்லியர்ஸ் நான் பார்த்த வீரர்களில் சிறந்த ஒருவர் – மஹேல ஜயவர்தன

கிரிக்கெட் உலகின் முக்கிய வீரர்களான அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட்…

இந்நிலையில், போட்டியின் இரண்டாவது நாளான நேற்றைய தினம் (25) பாகிஸ்தான் அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியது.

இதன்போது அவ்வணிக்காக அபாரமாக விளையாடி 68 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பாபர் அஸாமுக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ் பந்து வீசினார்.

ஸ்டோக்ஸ் வீசிய பந்து நேரடியாக அஸாமின் முழங்கை பகுதியை பலமாக தாக்க, அவர் வலியால் துடித்தார். இதனையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. எனினும், அவரால் கையை கீழே போட முடியாமல் போக உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் (Scan) பரிசோதனைகளின்படி அஸாமின் முழங்கை பகுதியிலுள்ள எலும்பு முறிவடைந்தமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே அவருக்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்த, இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலிருற்து பாபர் அஸாம் விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது பாபர் அஸாமுக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான முழு தொடரிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக உடனடியாக நாடு திரும்பவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாபர் அஸாமின் அரைச்சதத்தின் உதவியால் நேற்றைய இரண்டாவது நாள் நிறைவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 350 ஓட்டங்களைக் பெற்றுக்கொண்டதுடன், இங்கிலாந்து அணியை விட 166 ஓட்டங்கள் முன்னிலையும் பெற்றிருந்தது.

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்

இலங்கை அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையில் அடுத்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணிக்காக அபாரமாக விளையாடி வருகின்ற 23 வயதான பாபர் அஸாமுக்கு முகங்கொடுக்க நேரிட்ட இந்த திடீர் உபாதையானது பாகிஸ்தான் அணிக்கு மிகப் பெரிய இழப்பாக அமையவுள்ளது.

இதேவளை, பாபர் அஸாமுக்குப் பதிலாக எந்தவொரு மாற்று வீரரும் அறிவிக்கப்படாத நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01) ஹெடிங்லியில் நடைபெறவுள்ள இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பக்கர் ஸமான், உஸ்மான் ஷலாஹுதீன் மற்றும் சமி அஸ்லம் ஆகிய மூவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க