ஓய்வுபெற வேண்டாமென மெஸ்சிக்கு மெரடோனா வேண்டுகோள்

265
Maradona urges Messi not to quit Argentina

உலகின் சிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. உலகம் முழுவதும் கோடிக் கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடம் பெற்றுள்ள அவர் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓய்வுபெறுவதாகக் கூறியுள்ளார்.

கோபா அமெரிக்க கோப்பை இறுதிப்போட்டியில் சிலியிடம் தோற்றதைத் தொடர்ந்து சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்சி கனத்த இதயத்துடன் இந்த முடிவை அறிவித்தார். இதனால் அவர் ஆர்ஜென்டினா அணிக்காக இனி விளையாடமாட்டார். பார்சிலோனா கிளப் அணியில் மட்டுமே விளையாடுவார்.

29 வயதான அவரால் ஆர்ஜென்டினா அணிக்கு எந்தக் கிண்ணத்தையும் பெற்றுத்தர முடியவில்லை என்ற ஆதங்கத்தில் மனம் நொந்து போன நிலையில ஓய்வை அறிவித்துவிட்டார். சர்வதேசப் போட்டியில் 2005–ம் ஆண்டு அறிமுகமான அவரால் டிகோ மரடோனாபோல் பெருமையைத் தேடித்தர முடியவில்லை.

2006, 2010 உலகக் கோப்பையில் கால்இறுதியில் தோற்றது. 2014–ல் இறுதிப் போட்டிவரை வந்து உலக கோப்பையை வெல்ல இயலாமல் மெஸ்சி ஏமாற்றம் அடைந்தார். கோபா அமெரிக்க போட்டியில் 3 முறை நெருங்கி வந்து கோப்பையை இழந்தார்.

2007–ம் ஆண்டும், 2015–ம் ஆண்டும், தற்போதும் அவரது கோப்பை கனவு கலைந்தது. பெனால்டி ஷுட் அவுட்டைத் தவற விட்டதால் அவர் கண்ணீருடன் இருந்ததை அனைவராலும் காணமுடிந்தது. 2008–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மட்டும் ஆர்ஜென்டினா அணிக்காகத் தங்கப் பதக்கம் வென்றார்.

பார்சிலோனா அணிக்காக பல்வேறு கிண்ணங்களைப் பெற்றுதந்து பெருமை சேர்த்த மெஸ்சியால் தனது நாட்டு அணிக்காக ஒரு கிண்ணத்தைக்கூட முத்தமிடாமல் போனது பரிதாபமே.

சர்வதேசப் போட்டிகளில் 55 கோல்கள் அடித்த மெஸ்சியின் இந்த ஓய்வு முடிவு ஆர்ஜெண்டினா ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே மெஸ்சி ஆர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும். ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரபல வீரர் டிகோ மரடோனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

ஆர்ஜென்டினா அணியில் மெஸ்சி நீடிக்க வேண்டும். ஏனென்றால் அவர் இன்னும் மிகவும் திறமையுடன்தான் இருக்கிறார். 2018–ம் ஆண்டு ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பையில் விளையாடவேண்டும். உலக கோப்பையை வென்று பெருமை சேர்க்க வேண்டும்.

மெஸ்சியை ஓய்வு பெறுமாறு யார் சொன்னது? ஆர்ஜென்டினா கால்பந்து அணி தற்போது மோசமான கட்டத்தில் இருக்கிறது.

இதேபோல அந்நாட்டு அதிபரும் மெஸ்சி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை அவர் ஏற்பாரா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்